யு.எஸ் பத்திரிக்கையாளருக்கு பேட்டி... போலீஸ் துருவி, துருவி விசாரணை... இரவில் சாலை மறியல்
தூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவினர் இரவில் திடீர் சாலை மறியலில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி பனிமயமாதா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அலாய் கர்டோசா என்பவரது மகன் பிரின்ஸ் (வயது 52) இவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்தநிலையில், பிரின்ஸ், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு மற்றும் பண்டாரம்பட்டி கிராம மக்களை அமெரிக்கா நாட்டு பத்திரிக்கையாளர் மார்க் என்பவர் பேட்டு எடுத்துள்ளார்.

விசாரணை
இதுகுறித்து தகவலறிந்த வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் தென்பாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார், பிரின்ஸை நேற்று இரவு 10.15 மணி அளவில், விசாரணை அழைத்து செல்வதாக கூறி வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். ஆனால், எந்த காவல் நிலையம் அழைத்துச் செல்லப்படுகிறார் என்று சொல்லவில்லை.

சாலை மறியல்
இதனையடுத்து, இரு காவல் நிலையத்திலும் உறவினர்கள் தேடிப் பார்த்தனர். அங்கு பிரின்ஸ் இல்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு, வியாபாரிகள் சங்க நிர்வாகி தெர்மல் ராஜா, திரேஸ்புரம் மீனவர் ரீகன் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி பனிமய மாதா கோவில் முன்பு கடற்கரை சாலையில் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர்.

பிரின்ஸ் விடுவிப்பு
போராட்டம் குறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரின்ஸ் உடனே விடுவிக்கப்பட்டு அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இத்தகவல் மறியலில் ஈடுபட்டவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. ஆனால் மறியல் செய்தவர்கள் பிரின்ஸ் இங்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பிரின்ஸ் பேட்டி
இதனைத் தொடர்ந்து, அவரை போராட்டக் குழுவினர் காரில் சென்று, பிரின்சை வீட்டில் இருந்து அழைத்து வந்து மக்கள் முன்பு காட்டினர். அப்போது, செய்தியாளர்களிடம் பிரின்ஸ் கூறியதாவது: தன்னை ஒவ்வொறு காவல் நிலையமாக கொண்டு சென்று, அங்கு உள்ளே செல்லாமல் போலீஸ் வாகனத்திலேயே வைத்து என்னை அலைக்கழித்தனர். வெளிநாட்டில் இருந்து வந்தவர் யார்? ஏன் வந்துள்ளார்? என்ன கேட்டார்? எங்கெல்லாம் அழைத்துச் சென்றீர்கள் என்ற விவரங்களை கேட்டனர். அதற்குள், மக்கள் போராட்டம் செய்வது அறிந்தவுடன் திருப்பி அனுப்பி விட்டனர் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications