தமாகாவிலிருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ! நாடாளுமன்ற சீட்டை ஜி.கே.வாசன் விற்பதாக சரமாரி குற்றச்சாட்டு
தூத்துக்குடி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த கதிர்வேல் திடீரென அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். ஜி.கே. வாசனை கடுமையாக விமர்சித்திருந்தார் கதிர்வேல்.
மக்களவை தேர்தலில் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறது. சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் இவர்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மயிலாடுதுறை, தஞ்சை, ஈரோடு கேட்ட நிலையில் தமாகாவுக்கு ஈரோடு மட்டுமே கிடைத்தது. மயிலாடுதுறை, தஞ்சைக்கு பதிலாக ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதில் ஈரோடு தொகுதியில் விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால் , தூத்துக்குடி தொகுதியில் விஜயசீலன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் தமாகாவிலிருந்து விலகிவிட்டார்.
இதுகுறித்து கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுக்கு கதிர்வேல் இரு தினங்களுக்கு முன்பு கடிதம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில் நான் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளாக பயணித்து வந்தேன். பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கியதும் ஜி.கே.வாசனுடன் அரசியலில் பயணித்து வந்தேன்.
நான் ஐஎன்டியூசி தொழிற்சங்கங்களுக்கு தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறேன். தமாகாவை பொருத்தமட்டில் தோற்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. கடந்த காலங்களில் அமைச்சர் பதவி கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டது. மேல்சபை எம்பி பதவி கொடுத்த அதிமுகவுக்கும் துரோகம். இப்படி பதவி கொடுத்த கூட்டணி கட்சிகளுக்கே இவர் துரோகம் செய்து வருகிறார்.
இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் சீட் வாங்கி அதனை அதிக விலைக்கு விற்று வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போதுமக்கள் நலக் கூட்டணியில் தமாகா சார்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்டேன். அந்த கூட்டணியிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது நான்தான்.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். ஆனால் என்னை விட கூடுதலான விலைக்கு கேட்டவருக்கு ஜி.கே.வாசன் சீட்டை விற்றுவிட்டார். இதனால் நான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவிட்டேன். நான் ஏன் விலகினேன் என்பதை கட்சித் தலைமைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்திவிட்டேன். மேலும் ஜி.கே.வாசனிடம் "இந்த கட்சியில் பயணிக்க விருப்பம் இல்லை, அதனால் விலகிக் கொள்கிறேன்" என கூறிவிட்டேன். இவ்வாறு கதிர்வேல் தெரிவித்தார். கதிர்வேல் கட்சியிலிருந்து விலகிய நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவராக கோவில்பட்டி நகர தலைவர் கே.பி.ராஜகோபாலை கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் நியமனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications