அட.. தவித்த ரயில் பயணிகளுக்கு உதவியதற்காக ரயில்வே அளித்த வெகுமதியை நிவாரண நிதியாக வழங்கிய மக்கள்!
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே கனமழையால் 2 நாட்கள் ரயிலில் சிக்கித் தவித்த பயணிகளுக்கு உணவளித்து உதவிய தாதன்குளம் ஊர் மக்களுக்கு ரயில்வே நிர்வாகம் அளித்த உதவித்தொகை ரூ.15 ஆயிரத்தையும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ள நிவாரண நிதியாக அளித்துள்ளனர் கிராம மக்கள்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்தது. 17ஆம் தேதி, திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு கிளம்பிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தின் அடிப்பகுதி அரித்துச் சென்றதால், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த ரயிலில் இருந்து 300 பேர் மீட்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். ரயில் நிலையத்தில் மீதமுள்ள பயணிகள், சுற்றிலும் வெள்ளம் காரணமாக மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த ரயிலில் பயணித்த பயணிகள் சிலர் தண்டவாளத்தின் வழியாக தாதன்குளம் கிராமத்திற்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு உணவு கொடுத்து உதவி வழங்கிய கிராம மக்கள் அவர்களை செய்துங்கநல்லூர் கிராமத்திற்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
ரயிலில் பயணித்து வந்தவர்களுக்கு உணவு கொடுத்து பத்திரமாக வழி அனுப்பி வைத்த தாதன்குளம் கிராம மக்களுக்கு ரயில்வே நிர்வாகம் 15,000 ரூபாயை வெகுமதியாக அளித்தது. அந்த தொகையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வெள்ள நிவாரண நிதிக்கு தாதன்குளம் கிராம மக்கள் கொடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தூத்துக்குடி எம்.பி கனிமொழியிடம் ரூ.15,000 தொகையை தாதன்குளம் கிராம மக்கள் நேரில் சென்று வழங்கினர். அப்போது தூத்துக்குடி எம்.பி கனிமொழியிடம் பாலக்காடு ரயில் தாதன்குளத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.












Click it and Unblock the Notifications