திருச்செந்தூர் கடலில் "விழும்" ஸ்வீட்நியூஸ்.. அமலிநகர் "தூண்டில் வளைவு" பாலம் வருதா? கூடுதே அழுத்தம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் மீனவர்கள் கோரிக்கை வலுத்து வரும்நிலையில், தூண்டில் வளைவு பாலம் விரைவில் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
திருச்செந்தூர் அமலிநகரில் மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருவது தூண்டில் வளைவு பாலம் ஆகும்.. இந்த கோரிக்கையை ஏற்று, கடந்த 2022-ம் ஆண்டு சட்டசபையில் அறிவிப்பும் வெளியானது. ஆனால் அந்த பாலம் அமைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.

பாலம்: எனவே, தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மனித சங்கிலி போராட்டம், கூட்டுப்பிரார்த்தனை போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டம் தீவிரமாகி கொண்டும் வருகிறது. இதற்கு என்ன காரணம்?
திருச்செந்தூர் பக்கத்திலிருக்கிறது இந்த அமலி நகர் என்கிற மீனவ கிராமம்.. இந்த கிராமத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள், தினமும் மீன்பிடிக்க கிளம்பி சென்று வருகிறார்கள்.
தூண்டில் வளைவு: ஆனால், தூண்டில் வளைவு அமைக்கப்படாததால், கடல் அரிப்பு அதிகமாகவே இந்த பகுதிகளில் ஏற்பட்டு வருகிறது. இதனால், ஒவ்வொருமுறையும் கடலுக்குள் செல்லும்போதும், திரும்பி வரும்போதும் படகுகள் சேதமடைந்து விடுகின்றன.. அப்படியே படகில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தாலும் பேரலையின் சீற்றத்தால் மறுபடியும் பழுதாகிவிடுகின்றன. அதனால்தான், தூண்டில் பாலம் கேட்டு வருகிறார்கள் மீனவர்கள்.
இதனால், அதிகப்படியாக எழும் கடல் அலை சீற்றத்தை கட்டுப்படுத்தவும் முடியும் என்று நம்புகிறார்கள்.. அலையின் வேகமும் குறையும். கடல் அரிப்பும் ஏற்படாது. எவ்வளவுதான் சீற்றம் வந்தாலும், ஊருக்குள் கடல்நீர் புகுந்துவிடாது.. கடற்கரை பகுதிகளிலும் அரிப்பு ஏற்படாது.
திடீர் தடை: கடந்த வருடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் சென்று இங்கு ஆய்வு செய்தனர்.. பிறகு பட்ஜெட்டிலும், தூண்டில் பாலம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள். இதற்காக ரூ. 84 கோடி மதிப்பீட்டில் திட்டமும் தயாரிக்கப்பட்டது.. இப்படிப்பட்ட சூழலில்தான், திடீரென தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இதில் தலையிட்டது..
கடல் பகுதிகளிலும், கடலிலும் கற்களை கொட்டக் கூடாது, கற்களால் எந்தக் கட்டுமானமும் கட்டக் கூடாது, தூண்டில் பாலம் அமைக்கக்கூடாது என்று சொல்லியதுடன், தடையும் விதித்துவிட்டது. இதைக்கேட்டு மீனவர்கள் அதிர்ந்து போனார்கள். அப்போது முதல் இப்போதுவரை தூண்டில் பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
பெரிய பாறைகள்: ஆனால், பெரிய பெரிய பாறை துண்டுகளைக் குவித்து, பாலம் அமைக்கப்படுவதால், நிச்சயம் கடலுக்கு எந்த பாதிப்பும் வராது என்கிறார்கள் மீனவர்கள்..
மீனவர்களின் இந்த கோரிக்கைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்றுகூட ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில், "இந்த பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைத்துத்தர வேண்டும் என மீனவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த 2022-ம் ஆண்டு சட்டப்பேரவையில் மீன்வள மானிய கோரிக்கையில் 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

விஜயகாந்த்: ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் எந்த பணிகளும் நடைபெறாததால், இப்பகுதி மீனவர்கள் முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வேலை நிறுத்தம் காரணமாக பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியும் தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் காட்டி வரும் தமிழக அரசையும், மீனவளத்துறை அமைச்சரையும் வன்மையாக கண்டிக்கிறேன்.
உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைத்து அமலி நகர் மீனவர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். கடல் நீரை நம்பி வாழும் மீனவர்களின் கண்ணீரை துடைக்க வேண்டியது அரசின் கடமை. எனவே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி, இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்" என்று விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
நம்பிக்கை: இப்படி நாலாபக்கமும் அழுத்தங்கள் கூடிவருவதால், விரைவில் தூண்டில் பாலம் அமைக்கப்படும் என்று நம்புவதாக மீனவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications