திருச்செந்தூர், ராமேஸ்வரத்தில் சாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதி - கடலில் நீராட தடை நீடிப்பு
திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் கடலில் புனித நீராடவும், நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடவும் அனும
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 8 நாட்களுக்குப் பிறகு இன்று பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் கடலில் புனித நீராடவும், நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடவும் அனுமதி தடை நீடிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் இன்று காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் கடலில் புனித நீராட தடை நீடிக்கப்பட்டுள்ளது.
கொரொனா தடுப்பு நடவடிக்கையாக ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு முக்கிய கோவில்களில் கடந்த 1ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 1 ஆம்தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே நேரம் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் 8 நாட்களுக்குப் பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளின்படி கடலில் புனித நீராடவும், நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

ராமேஸ்வரத்தில் தங்க தேரோட்டம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் இன்று காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் கடலில் புனித நீராட தடை நீடிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 8வது நாளான நேற்று ஆடி அமாவாசையையொட்டி காலை 9 மணி அளவில் அம்பாள் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி 3ஆம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து பகல் 11 மணி அளவில் ராமபிரான், சீதை லட்சுமணர், சுக்ரீவர், ஆஞ்சநேயர் ஆகியோர் சிவதீர்த்தம் எதிரே உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு ராமர் சிலையுடன் குருக்கள் ஒருவர் தீர்த்தத்தில் இறங்கி நீராடி தீர்த்தவாரி பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் ராமபிரானுக்கு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.
இன்று அதிகாலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் முககவசம் அணிந்து, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு மேலும் வருகின்ற 11ஆம் தேதி ஆடி பூரம் தினத்தன்றும், வருகிற வெள்ளி சனி, ஞாயிறு ஆகிய தினங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல்மருவத்தூர் அதிபராசக்தி கோவில்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இரண்டு நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் நலன் கருதி நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் 11ஆம் தேதி புதன்கிழமை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் ஆடி அமாவாசை
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த 31ஆம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று முதல் சுவாமி தினமும் இரவில் சப்பரத்தில் பல்வேறு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் எழுந்தருளல் காட்சி நடந்தது. ஆடி அமாவாசை தினமான நேற்று
பிற்பகல் 1மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசனம் நடந்தது. அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சீவக்காய், பஞ்சாமிர்தம் போன்ற பலவகை பொருட்களால் அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகளும் நடைபெற்றது. மாலையில் இலாமிச்சைவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோலக்காட்சியும், இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனமும் நடந்தது. பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications