தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் குற்றவாளி கைதானது எப்படி? எஸ்.பி.மதன் விளக்கம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கில் கொலையாளி கைதானது எப்படி என்பது குறித்து எஸ்பி மதன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விளாத்திக்குளம் வேடநத்தத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அறிவியல் பூர்வமான விசாரணையின் அடிப்படையிலேயே தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

இந்த கொலை நடந்தது முதல் அந்த கிராமத்தைச் சேர்ந்த 900 ஆண்களிடம் விசாரணை நடத்தினோம். இது போன்ற குற்றத்தை அந்த நபர்கள் செய்ய வாய்ப்பிருக்கிறதா என்பதை அங்குள்ள மக்களிடம் விசாரித்து ஃபில்டர் செய்தோம்.
சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் அதை சுற்றியுள்ள இடங்களில் உள்ள 90-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம். கைது செய்த நபர் அந்த வழியாக பைக்கில் வந்தார் என்பதற்காக கைது செய்யவில்லை.
அறிவியல் பூர்வமாக ஆதாரங்களை சேகரித்து அது உறுதியானதும் மட்டுமே கைது செய்தோம். யாருடைய அழுத்தத்தின் பேரிலும் யாரோ ஒருவரை கைது செய்யவில்லை. அவர் உண்மையை ஒப்புக் கொண்ட போதிலும் எங்களுக்கு கிடைத்த ஆதாரங்களையும் பொருத்தி பார்த்துதான் கைது செய்தோம்.
என்ன மாதிரியான ஆதாரம் கிடைத்தது என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. மேலும் அந்த சிறுமியின் பெயர், புகைப்படத்தை யாரும் வெளியிடக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த 9 நாட்களாக 150-க்கும் மேற்பட்ட எஸ்ஐக்கள், இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் ஓய்வு எடுக்காமல் இந்த கேஸை நடத்தினர். அவர்களுக்கு பாராட்டுகள்.
மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். குற்றத்தில் இவருக்கு மட்டும் தொடர்பா இல்லை வேறு யாரேனும் இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணைக்கு பிறகே தெரியவரும். கொலையாளிக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தரவேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1200 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்ளனர். அவர்களை எல்லாம் நாங்கள் கண்காணித்துதான் வருகிறோம். கைதான நபருக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை. அவர் எதற்காக வேடநத்தம் வந்தார் போன்ற விவரங்களை தற்போது சொல்ல முடியாது என எஸ்.பி.மதன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்ற போது அவரம் வீடு திரும்பவில்லை. இதையடுத்து போலீஸாரிடம் புகார் அளித்து தேடிய போது அந்த மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் கொலை வழக்கில் 10 தனிப்படைகள் அமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த ஊரை சேர்ந்த 5 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (30) என்பவரை போலீஸார் கைது செய்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications