Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடிச்சு விட்ட ஜோசியர்.. இரவில் திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்! கோவில் நிர்வாகம் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் பௌர்ணமி தினத்தில் கோயில் கடற்கரையில் தங்கி சுவாமி தரிசனம் செய்தால், வேண்டுதல் நிறைவேறும் என தாங்கள் நம்புவதாக பக்தர்கள் கூறி வந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவில் முன்புள்ள கடற்கரையில், பாதுகாப்பு கருதி இரவு நேரத்தில் தங்க தடை விதித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்" என்ற கூற்றிற்கு இணங்க தமிழ்க் கடவுளாம் முருகப்பெருமான் பெரும்பாலும் மலைகளிலும், குன்றுகளில் தன் தலங்களை அமைத்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். ஆனால், அதற்கென்று விதிவிலக்காக கடற்கரையில் அமைந்துள்ள அற்புத ஆலயம்தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.

கடல் அலைகளின் ஒலியே முருகனைப் போற்றும் வகையில் அமைந்திருக்கும், இந்த கோவில், முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது தலமாக பெருமை பெற்றுள்ளது. கோவில் வழிபாட்டை முடித்து வெளியில் வரும் போது, நடைபாதை மேலே செல்லும் வகையில் அமைந்துள்ளது.

tuticorin Tiruchendur Murugan Temple

திருச்செந்தூர் முருகன்

அதாவது, சுவாமியை வணங்கி வெளியே வரும் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் உயரவே போகிறார்கள் என்பதற்கான அடையாளமாகவே அந்த பாதை அமைந்துள்ளது என பக்தர்கள் நம்புகிறார்கள். இங்கு வழிபடும் மக்கள் பெரும்பாலும் திருமண தடை நீங்கும், தொழில் வளர்ச்சி ஏற்படும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்று நம்பிக்கையுடன் வருகிறார்கள். குறிப்பாக, வைகாசி விசாகம் காலத்தில் விரதமிருந்து திருச்செந்தூர் முருகனை தரிசித்து விட்டு மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்வது இந்த தலத்தின் தனிச் சிறப்பாகும்.

பௌர்ணமி தரிசனம்

முருகனின் புகழ் பரவி வரும் இக்காலத்தில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரை நோக்கி வருவது சாதாரணமாகி விட்டது. "கடலா கடல், அலையா மக்கள் கூட்டம்" என சொல்லக்கூடிய அளவுக்கு, தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் போன்ற திருவிழாக்களில் கோவில் பகுதியில் மக்கள் வெள்ளம் அதிகரித்துக் காணப்படும். அதோடு, சுப முகூர்த்த தினங்களில் நூற்றுக்கணக்கான திருமணங்களும் இந்த ஆலயத்தில் நடைபெறுவது வழக்கமாகும்.

கடற்கரை வழிபாடு

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஒரு புதிய நம்பிக்கை வேகமாக பரவி வருகிறது. அது என்னவெனில், பௌர்ணமி இரவில் திருச்செந்தூர் கடற்கரையில் தங்கி இருந்து முழுநிலவைக் கண்டு பூஜை செய்து, அதிகாலையில் முருகப்பெருமானை தரிசித்தால் எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்ற நம்பிக்கை. இதன் காரணமாக, கடந்த சில பௌர்ணமி தினங்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அன்றைய தினம் பலர் குடும்பத்துடன் கடற்கரையில் தங்கி, நிலாவை நோக்கி பூஜை செய்து, விரதம் இருந்து, விடிய விடிய விழித்திருந்து, அதிகாலை நேரத்தில் குளித்து, கோவிலுக்குள் சென்று விஸ்வரூப தரிசனம் செய்கின்றனர்.

பௌர்ணமி பூஜை

இந்த பௌர்ணமி பூஜை வழக்கம் கடந்த சில மாதங்களாக மட்டுமே தொடங்கியுள்ளது. இதற்கு முன் இத்தகைய வழிபாடு இல்லை. சில ஜோதிடர்கள் சொன்னதால் மக்கள் இதனை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர் என்கின்றனர் திருச்செந்தூர்வாசிகள். இந்நிலையில், சமீப காலமாக கோவில் முன்பு தங்கும் பக்தர்களிடம் அதிக அளவில் திருட்டு நடைபெறுவதும் பொருட்கள் காணாமல் போவதும் போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கோவில் நிர்வாகம் நடவடிக்கையை எடுத்துள்ளது.

பக்தர்கள் பாதுகாப்பு

அதன்படி இன்று முதல் கடற்கரை பகுதியில் யாரும் இரவு நேரங்களில் தங்க அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கோவில் கடற்கரை பகுதியில் தரிசனத்திற்காக குடும்பத்துடன் தங்கி இருக்கும் பக்தர்களை திருக்கோவில் பணியாளர்கள், காவல்துறையினர்கள் கடலோர பாதுகாப்பு குழுவினர்கள் ஆகியோர், அப்புறப்படுத்தினர். இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கோவில் முன்புள்ள கடற்கரையில் தங்க அனுமதி இல்லை என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.

இரவில் தங்க தடை

அதன்படி திருக்கோவில் முன்புள்ள கடற்கரை பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அய்யா கோவில் வரை உள்ள கடற்கரை பகுதியில் பக்தர்கள் யாரும் இல்லாதவாறு கடலோர பாதுகாப்பு குழுவினர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தற்பொழுது அவர்களுக்கு அறிவுரை வழங்கி கோவில் வளாகங்களில் மற்றும் அங்குள்ள மண்டபங்களில் தங்கிக் கொள்ளுமாறும் கூறி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+