2000 ரூபாய் டிக்கெட்.. தூத்துக்குடி பஸ் ஸ்டாண்டையே அதிர வைத்த ஆம்னி பஸ்.. இறுதியில் தரமான சம்பவம்
தூத்துக்குடி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் இருந்து சென்னைக்கு சென்ற தனியார் ஆம்னி பேருந்திற்கு கட்ணமாக 1500, 2000 என வசூலித்திருந்தார்கள்.அந்த பேருந்து பயணிகளை ஏற்ற தூத்துக்குடி வந்த போது தான், அது சுந்தரா டிராவல்ஸ்யையே மிஞ்சும் அளவிற்கு இருந்தது தெரியவந்தது. ஆம்னி பேருந்து சாலையில் ஓடுவதற்கே தகுதியற்றது, பட்டி டிங்கரிங் பார்த்து வந்ததாக பயணிகள் கொந்தளித்தனர். நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டு சாதித்தனர்.
இப்போது ஆன்லைனில் தான் பலர் பஸ் டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள். பஸ் நிறுவனத்தின் மீதான நம்பிக்கை, பஸ்ஸில் உள்ள வசதிகள், பேருந்து புதிய பேருந்தா, பேருந்துக்கு பயணிகள் தரும் ரேட்டிங், குறித்த நேரத்தில் பேருந்து சென்று விடும் என்ற நம்பிக்கை இருந்தால் தான் ஆம்னி பேருந்துகளில் மக்கள் முன்பதிவு செய்வார்கள்.

அதேநேரம் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் சில நேரங்களில் விண்ணை முட்டும்.. அப்படிப்பட்ட சமயங்களில் ஏதாவது ஒரு பேருந்தில் முன்பதிவு செய்தே ஆகவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். அந்த சூழலில் ஓட்டை பேருந்துகள் கூட சென்னைக்கும், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும் ஓடுவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் கோடை விடுமுறையை முன்னிட்டு பலர் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் பேருந்து சென்று வருகின்றன. இதை பயன்படுத்தி கட்டணம் அதிகமாக வசூலிப்பதும் நடக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் இருந்து சென்னைக்கு ஒரு தனியார் ஆம்னி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நிறுவனம் பயணிகளிடம் ரூ.1,500 முதல் 2 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கட்டணத்திற்கு ஏற்றவாறு பேருந்தின் தரம் இல்லை என்று பயணிகள் கொதித்து போனார்கள்.
பயணிகளை ஏற்றுவதற்காக நேற்று முன்தினம் இரவு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் ஆம்னி பேருந்து ஒன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வந்திருக்கிறது. அப்போது, பேருந்தைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதிக கட்டணம் கொடுத்து தரமே இல்லாத பேருந்தில் எப்படி பயணம் செய்வது? என கடும் கோபம் அடைந்தனர். சுந்தரா டிராவல்ஸ் போல் ஓட்டை உடைசல் உடன் பேருந்து இருந்ததால் சண்டை போட்டனர்.
மேலும் தங்களுக்கு மாற்றுப் பேருந்தை ஆம்னி பேருந்து நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், இல்லை என்றால் பணத்தை திருப்பித் தர வேண்டும் என்று கூறிய தூத்துக்குடி பயணிகள், சுமார் 3 மணி நேரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனால் விசாரித்த போது, பேருந்தில் முறையான ஆவணங்கள் கூட கிடையாது என்றும் எப்படி அதை ஓட அனுமதிக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்கள். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தரமே இல்லாத இந்த ஆம்னி பேருந்தை உடனடியாக ஆர்டிஓ அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என போலீசாருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, பயணிகளுக்கு பணம் திருப்பி கொடுக்கப்பட்டது.
பள்ளி விடுமுறை காலத்தில் உரிய ஆவணம், முறையான பாதுகாப்பு இல்லாத, தரமற்ற ஆம்னி பேருந்துகளை அரசு அனுமதிக்கக் கூடாது என்றும், வட்டார போக்குவரத்து அலுவலகம் தலையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்கிருந்த பயணிகள் கோரிக்கை வைத்தனர். குறிப்பிட்ட ஆம்னி பேருந்து சாலையில் செல்ல தகுதியே இல்லை என்றும் சக்கரங்கள் அனைத்து தேய்ந்து உள்ளதாகவும், கீழே உடைந்து விழும் பேருந்தின் பாகங்களை, பட்டி டிங்கரிங் செய்து ஒட்ட வைத்துள்ளனர் என்றும் பேருந்தின் ஓனரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் பயணிகள் குற்றம்சாட்டினர்.












Click it and Unblock the Notifications