"பர்த்டே கிப்ட்".. பனை ஓலையில் பிரதமர் நரேந்திர மோடி! கச்சிதமாக வடிவமைத்த தூத்துக்குடி தொழிலாளி
தூத்துக்குடி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை ஒட்டி, அவரது உருவத்தை பனை ஓலையில் வடிவமைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் தூத்துக்குடியை சேர்ந்த பால்பாண்டி.
பிரதமர் நரேந்திர மோடி தனது 72-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது; ரத்ததானம் முகாம்களை நடத்துவது; அன்னதானம் வழங்குவது என ஒவ்வொரு மாநிலத்திலும் மோடியின் பிறந்தநாளை பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

களைகட்டும் கொண்டாட்டம்
பாஜகவினரின் கொண்டாட்டம் ஒருபுறம் இருக்க, பல இடங்களில் பொதுமக்களே பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை அவரவர் விருப்பப்படி கொண்டாடி வருகின்றனர். ஒரு சிலர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடுகிறார்கள். சிலரோ தங்கள் பகுதியில் தண்ணீர் பந்தல், மோர் பந்தல், இலவச உணவு ஆகியவற்றை வழங்கி மோடியின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். மேலும் பல பகுதிகளில் மோடியின் பிறந்தநாளை ஒட்டி கலை நிகழ்ச்சிகளும், அவரது சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்களும் நடைபெறுகின்றன.

பனை ஓலையில் மோடி உருவம்
அந்த வகையில், தூத்துக்குடியைச் சேர்ந்த பனைத் தொழிலாளி பால்பாண்டி என்பவர் தனது வீட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை பனை ஓலைகளாலேயே தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். அவரது உருவப்படத்துக்கு கண்ணாடி அணிவித்தும், மிடுக்கான ஆடைகளை அணிவித்தும் பால் பாண்டி அசத்தியுள்ளார். பார்ப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியே நின்று கொண்டிருப்பதை போல தத்ரூபமாக அவரது உருவத்தை பனை ஓலையில் பால்பாண்டி செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆர்வத்துடன் பார்க்கும் மக்கள்
பனை ஓலையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாமல் அக்கம்பக்கத்து ஊர்க்காரர்களும் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.
பனைத் தொழிலாளி பால் பாண்டி இதற்கு முன்பாக, முன்னாள் தமிழக முதல்வர்கள் காமராஜர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் உருவத்தையும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் உருவத்தையும் பனை ஓலையில் செய்து கவனம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் இரும்புச் சிலை
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெற்கு குஜராத் பகுதியில் உள்ள அம்ரேலி மாவட்டத்தின் சர்வகுண்டலா என்ற பகுதியில் மோடிக்கு 51 அடி இரும்பு சிலை அமைக்க மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று அதற்கான பூமி பூஜைககள் நடைபெற்றன.
அதேபோல, அந்த மாவட்டத்தின் பாஜக துணை தலைவர் சுரேஷ் பன்சூரியா அங்குள்ள தொழிலதிபர்களுடன் இணைந்து பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று 400 ஜோடிக்கு இலவச திருமணம் செய்து வைக்கிறார். அத்துடன் பிரதமர் மோடியின் நலனுக்காக யாகம் ஒன்றையும் அவர் நடத்துகிறார். இந்த யாகத்தில் சுமாப் 10,000 பேர் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications