வாயில் சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்னோலின்... மறக்க முடியாத தூத்துக்குடி ஸ்டெர்லைட் கொடூரங்கள்
தூத்துக்குடி: கடந்த ஆண்டு மே 22ம் தேதி இதே நாளில் தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் 17வயது பெண் ஸ்னோலின் வாயில் சுட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இதே கொடூர நிகழ்வில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஸ்னோலினோடு சேர்த்து 13 பேர் கொல்லப்பட்டனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி அந்த பகுதி மக்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் திடீரென போராட்டங்களை தொடங்கினர். தினசரி இவர்கள் நடத்தி வந்த போராட்டங்களுக்கு அரசு உடனே செவி சாய்க்கவில்லை.
இதனால் சுமார் 100 நாட்கள் தூத்துக்குடியில் போராட்டம் அமைதியான முறையில் நடந்தது. இந்த போராட்டம் 100வது நாள் எட்டியதை நினைவுப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி செல்ல மக்கள் முடிவு செய்தனர்.

பொதுமக்கள் முடிவு
ஆனால் போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். எனினும் தடையை மீறி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அந்த பகுதி மக்கள் முடிவு செய்தனர்.

தடியடி
இதன்படி மே22ம் தேதி காலையில் பேரணியாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். அப்போது போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து முன்னேறி சென்றனர். இந்நிலையில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் நெருங்கிய போது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் கற்களை வீசி தாக்கினர். இதனால் அந்த பகுதி கலவரமான நிலைக்கு மாறியது.

13 பேர் கொலை
இதையடுத்து போலீசார் பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் தான் 12ம் வகுப்பு மாணவி ஸ்னோலின். இவரை போலீசார் சுட்ட குண்டு வாயில் பாய்ந்து பின் பக்கம் வழியாக வெளியே சென்று உயிரிழந்தார்.

முதலாம் ஆண்டு
தவறை தட்டி கேட்க வேண்டும், வக்கீலுக்கு படிக்க வேண்டும். இந்த உலகத்துக்கு தன்னால் முடிந்ததை செய்வேன் என்று சொல்லிக்கொண்டிருந்த தனது மகள் ஸ்னோலின் உயிரிழந்ததை அவரது தயாரால் இன்னும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஸ்னோலின் நினைவாகவே வாடும் அவரது தாயார் உள்பட சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரின் தாயார்களும் உறவுகளும் கண்ணீருடனும் சோகத்துடன் இன்று முதலாம் ஆண்டுநினைவு அஞ்சலி கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.

விடை தெரியாத கேள்விகள்
அதிகார வர்கத்தை எதிர்த்து நடத்தும் போராட்டங்களில் அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள். போராட்டத்தை தூண்டியவர்கள் யார், போராட்டம் நடத்தும் அளவுக்கு சூழலை உருவாக்கியவர்கள் யார்?. கொடூரமாக சுடடுக்கொல்ல உத்தரவிட்டது யார்? மக்களுக்கு பிடிக்கவில்லைஎன்றால் அந்த ஆலையை இத்தனை ஆண்டுகள் நடத்த உதவியவர்கள் யார்? இப்படி எதற்குமே இன்னும் விடை தெரியவில்லை. விடைகளை தேடிய 13 ஆத்மாக்களும் இதே மே 22ம் தேதி இறைவனை நோக்கி சென்றுவிட்டன.












Click it and Unblock the Notifications