கனிமொழிக்கு தனித்தனியாக வரவேற்பு தந்த அமைச்சர்கள்! இது தூத்துக்குடி ஸ்டைல் பவர் பாலிடிக்ஸ்!
தூத்துக்குடி: திமுக துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இன்று தூத்துக்குடி சென்ற கனிமொழி எம்.பி.க்கு, அமைச்சர்கள் இருவர் தனித்தனியாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும், FCI குடோன் அருகே அமைச்சர் கீதா ஜீவனும் தங்கள் ஆதரவாளர்களை பெருமளவில் திரட்டி மாஸ் காட்டிவிட்டனர்.
இருவர் கொடுத்த வரவேற்பையும் இன்முகம் மாறாமல் ஏற்றுக் கொண்ட கனிமொழி தன்னை சந்திக்க வந்த தொண்டர்களிடமும் வாழ்த்துப் பெற்றுக் கொண்டார்.
ரப்பர் ஸ்டாம்ப்..அருகதை இருக்கா? பாஜகவிற்கு பயம்..எல் முருகனுக்கு பதிலடி கொடுத்த கனிமொழி
புதிய பதவி
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்ட பிறகு முதல்முறையாக இன்று தனது தொகுதிக்கு வந்தார் கனிமொழி. தூத்துக்குடி விமான நிலையம் அருகே ஸ்டேஜ் அமைத்து தனது ஆதரவாளர்களை இறக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தடபுடலாக கனிமொழியை வரவேற்று கவனம் ஈர்த்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மொத்தப் பேரையும் விமான நிலையம் வரவழைத்து மாஸ் காட்டியிருந்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
அமைச்சர் கீதாஜீவன்
இதனிடையே விமான நிலையத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக் கொண்டு காரில் புறப்பட்ட கனிமொழிக்கு அடுத்த சில நிமிடங்களில் தூத்துக்குடி FCI குடோன் அருகே அமைச்சர் கீதாஜீவன் மற்றொரு உற்சாக வரவேற்பை அளித்தார். அனிதா ராதாகிருஷ்ணை விட ஒரு படி மேலாக கனிமொழியை கொண்டாடினார் இவர். ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவித்து வெள்ளி வீர வாளை பரிசாக கொடுத்து அசத்தினார் அமைச்சர் கீதா ஜீவன்.
வீர வாள் பரிசு
அதுமட்டுமல்லாமல் தன் கையாலேயே கனிமொழிக்கு லட்டு ஊட்டிவிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார் அமைச்சர் கீதாஜீவன். மேலும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளை வரவழைத்து கனிமொழியை வாழ்த்து மழையில் நனைய வைத்தார். ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. சண்முகய்யா அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன் கோஷ்டியிலும், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அமைச்சர் கீதா ஜீவன் கோஷ்டியிலும் இடம்பெற்று கனிமொழிக்கு பொன்னாடை அணிவித்தனர்.
கனிமொழி ஹேப்பி
தூத்துக்குடியில் தனக்கு இப்படியொரு வரவேற்பு கொடுப்பார்கள் என்பதை எதிர்பார்க்காத கனிமொழி எம்.பி. நெகிழ்ந்து போனார். தன்னை சந்தித்து வாழ்த்துக் கூற வந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முதல் கடைக்கோடி தொண்டர்கள் வரை பொறுமையாக நின்று அவர்களது வாழ்த்தை பெற்ற பிறகே தூத்துக்குடியில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார் கனிமொழி.