கலர் மாறுதே..சென்னையையே தூக்கியடிக்கப் போகும் தூத்துக்குடி? இனி ஏர்பஸ்ஸே அசால்ட்டா வந்துட்டு போகலாம்!
தூத்துக்குடி: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி விமான நிலையத்தை மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 250க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கும் ஏர்பஸ் ஏ321 ரக விமானங்கள் வந்து செல்லும் வகையில் இந்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் குறித்து ஆய்வு செய்தார் திமுக எம்பி கனிமொழி.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது உலகம் முழுவதற்கும் இங்கிருந்து விமான போக்குவரத்து வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக திருச்சி, மதுரையில் விமான நிலையங்கள் உள்ளன.

ஆனால், சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி விமான நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நிலைமை தலைகீழாக இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே சென்னைக்கு அடுத்தபடியாக பஸ், விமானம், ரயில், கப்பல் என அனைத்து போக்குவரத்து வசதிகளையும் கொண்டது தூத்துக்குடி தான்.
தூத்துக்குடியில் ஏற்கனவே பல்வேறு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இதனால் இறக்குமதியும் ஏற்றுமதியும் செய்யும் நகரமாக தூத்துக்குடி இருக்கிறது. குறிப்பாக குணசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைக்கப்பட இருக்கும் நிலையில் வரும் காலங்களில் பல்வேறு நாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தூத்துக்குடிக்கு அதிகமான பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.

மேலும், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் தூத்துக்குடி விமான நிலையத்தை நம்பியே இருக்கின்றனர். இதனால் தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், வெளிநாடு மற்றும் வெளி மாநில மக்களின் வசதிக்காக, துாத்துக்குடி விமான நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது. துாத்துக்குடி - சென்னை இடையே, தினமும் ஐந்து முறையும், துாத்துக்குடி - பெங்களூரு இடையே தினமும் இரண்டு முறையும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில்,கூடுதல் விமானங்களை கையாளும் வகையில், 227.33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய முனையம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. சுமார் 17,341 சதுர மீட்டரில் அமைக்கப்படும் புதிய முனையத்தில், விமான போக்குவரத்து கண்காணிப்பு, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் அதை சார்ந்த அலுவலக கட்டடங்கள், தீயணைப்பு துறை கட்டடங்கள் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன. துாத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விமான நிலையத்தின் புதிய முனையத்திற்கு செல்லும் வகையில், 1 கி.மீ.,க்கு இணைப்பு சாலை புனரமைக்கும் பணியும் நடக்கிறது.

புதிய முனையத்தின் புறப்பாடு பகுதியில் நான்கு வாயில்களும், 21 பயணியர், 'செக் இன் கவுன்டர்'களும், மூன்று 'ஏரோ பிரிட்ஜ்'களும், இரண்டு வருகைக்கான, 'கன்வேயர் பெல்ட்'களும் அமைக்கப்படுகின்றன. மேலும், ஒரே நேரத்தில் ஐந்து விமானங்களை நிறுத்தும் வகையிலான வசதிகள், 500 பயணியர் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், இரண்டு வி.ஐ.பி., அறைகள், 'லிப்ட்' வசதிகள், பயணியர் அதிகமாக வருகை தரும் நேரங்களில், ஒரு மணி நேரத்திற்கு, 1,440 பயணியரை கையாளும் வகையிலான வசதிகள் என, அதிநவீன வசதிகளுடன் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.
புதிய முனையம் நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டடமாக அமைக்கப்படுகிறது. முனைய கட்டடங்கள் முழுதும் சூரியசக்தி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், புதிய முனையத்தில், 113.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 3,115 மீட்டர் நீளத்திற்கு விமான ஓடுதளம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால், மிகப்பெரிய ஏ - 321 ரக ஏர்பஸ் விமானங்களும் வந்து செல்ல முடியும். ஓடுதளம் அமைக்கும் பணி, இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில், புதிதாகக் கட்டப்பட்டு கொண்டிருக்கும் விமான நிலைய கட்டுமான பணிகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்பி ஆய்வு செய்தார். மேலும், புதிய முனையக் கட்டிடம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவையும் அவர் துவக்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications