குலசேகரன்பட்டினம் விண்வெளி பூங்கா! விவசாய நிலம் எடுக்க எதிர்ப்பு.. கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் அருகே ஆதியாக்குறிச்சி பஞ்சாயத்து பகுதியில் விண்வெளி பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்துவதை கைவிட வலியுறுத்தி நேற்று உடன்குடியில் 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து போகும் என கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தற்போது அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அனல் மின் நிலைய பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது.

குலசையில் அமைய உள்ள சிறிய ராக்கெட் ஏவுதளத்திற்காக குலசேகரன்பட்டினம் அருகே உள்ள அமராபுரம், கூடல் நகர் பகுதியில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வசித்த மக்களுக்கு உடன்குடி அருகே மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. நிலத்தை இழந்தவர்களுக்கு இழப்பீடு தொகை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே குலசேகரன்பட்டினம் அருகே உள்ள ஆதியாக்குறிச்சி பஞ்சாயத்தில் தமிழக அரசின் தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் விண்வெளி தொழிற்பூங்கா அமைய உள்ளது. இதற்காக சுமார் 1,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்ததப்படும் என்று கடந்த மாதம் 20 ஆம் தேதி தமிழக அரசு அறிவிவித்தது. இதன்படி, தற்போது நிலத்தை கையகப்படுத்தும் பணியில் கிராம நிர்வாக அலுவலர் உள்பட அரசு அதிகாரிகள் ஈடுபட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு கையகப்படுத்த உள்ள பகுதியின் அருகில் கொட்டங்காடு, வேதக்கோட்டைவிளை, ஞானியார் குடியிருப்பு, தீதத்தாபுரம், மாடவிளை, கந்தபுரம் உள்பட 15 கிராமங்கள் உள்ளன. குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலையில் இருந்து ஞானியார் குடியிருப்பு வரையில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்களும் புறம்போக்கு நிலங்களும் உள்ளன. இவற்றை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து போகும் என கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். காலம் காலமாக நடைபெற்று வரும் பனை ஏறும் தொழில், விவசாயம் என அனைத்தும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியிருப்பதாக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும், விவசாய நிலத்தை விட்டுவிட்டு விவசாயத்திற்கு பயன் இல்லாத இதர பகுதிகளை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று கொரிக்கை வைத்து வருகிறார்கள்.
இந்த கோரிக்கைகளை முன்வைத்து உடன்குடி பஜார் பாரதி திடலில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 15 கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். பச்சைத் தமிழகம் இயக்க மாநில தலைவர் சுப. உதயகுமாரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுப உதயகுமார் கூறியதாவது:-
உடன் குடி அனல் மின் நிலைய திட்டம், கல்லாமொழி நிலக்கரி இறங்கு தளம் உள்ளிட்ட திட்டங்களுக்காக ஏராளமான விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. ஆதியாக்குறிச்சியில் 1,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் போது இந்தபகுதி முற்றிலுமாக அழிந்து போகும். விவாசயம் இல்லாமல் போகும்" என்றார்.












Click it and Unblock the Notifications