குடிநீர் பஞ்சத்திற்கு காரணம் இருக்கு... திட்டங்கள் எங்கே போனது... தமிழிசை விளாசல்
தூத்துக்குடி: தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்றினாலே போதும், குடிநீர் பஞ்சம் தீரும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தராஜன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரநல்லூர் பகுதியில், இலவச சிறுநீரக பரிசோதனை முகாமை தமிழிசை செளந்தராஜன் தொடங்கி வைத்தார். இதில் அவரது மகன் சுகநாதன், கணவரும் சிறுநீரக சிறப்பு மருத்துவருமான செளந்தரராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தேர்தலில் தோல்வி அடைந்தாலும், அப்பகுதி மக்களுக்கு தேவையானவற்றை செய்ய விரும்புவதாக தெரிவித்தார். தமிழகத்தில் நேர்மறை அரசியலை விரும்புவதாகவும், குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் எனவும் கூறினார்.
புளிச்சமாவுக்கு இத்தனை அரசியலா? ஜெயமோகனைத் தாக்கியவரின் அண்ணன் பாஜக பிரமுகராம்!
ஆளும் கட்சியை குறை சொல்வதையே வேலையாக் கொண்டிருக்கும், திமுக, காங்கிரஸ் கட்சிகள் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த போது திட்டங்களை செயல்படுத்தவில்லை. தொலைநோக்கு திட்டத்துடன் காங்கிரஸ் - திமுக செயல்பட்டிருந்தாலே குடிநீர் பஞ்சம் வந்திருக்காது என்றும் தெரிவித்தார். இந்தி மொழி விவகாரத்தில் ரயில்வே அதிகாரிகள் செய்தது தவறு என்றும் அதே நேரத்தில் மொழியை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்றும் கூறினார்.
முன்னதாக , அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து பதிலளித்தால் பாஜக அதிமுகவை இயக்குகிறது எனக் கூறுவார்கள் என்றும், கூட்டணி தேர்தலுக்காக மட்டுமே; அதிமுக உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சி பதிலளிக்க கூடாது எனவும் பேசினார். உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி பற்றி அறிவிப்போம் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
அதே சமயம், ராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் ரஞ்சித் கூறிய கருத்து தவறு, அவர் பேச்சை பேச்சாகவே எடுத்துக்கொள்ள முடியாது என்றும் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தராஜனின் மகன் சுகநாதன், குலசேகரநல்லூர் பகுதியில் குடிநீரில் குளோரைடு அதிகம் கலந்துள்ளதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தார்.