தூத்துக்குடி செல்லப்பா மனைவியிடம் அடிக்கடி அத்துமீறிய அண்ணன்.. ஆள்மாறாட்டத்தால் தம்பிக்கு ஸ்கெட்ச்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்லப்பா என்பவரின் மனைவியுடன் வினோத்குமார் என்பவருக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கோபத்தில் இருந்து செல்லப்பா, வீடு புகுந்த வினோத்குமாரை வெட்ட போயிருக்கிறார்.. ஆனால் அவருக்கு பதில் அவரது தம்பி இருந்ததால் விபரீதம் மாறி நடந்துள்ளது.
தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை கூலித்தொழிலாளி ராஜ்குமாருக்கு 3 மகன்கள் உள்ளனர் . இதில் அவருடைய இளைய மகன் பிரவீன்குமார் (வயது 24), என்ஜினியர் ஆவார். நேற்று காலை வழக்கம் போல ராஜ்குமார் தனது மனைவியுடன் வெளியே வேலைக்கு போய்விட்டார். இதனால் வீட்டில் பிரவீன்குமார் மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலையில் அவரது வீட்டுக்கு மர்மநபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் திடீரென வீடு புகுந்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரவீன்குமாரை சரமாரியாக வெட்டினார்.

இதில் பலத்த காயம் அடைந்த பிரவீன்குமார் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். தகவல் அறிந்ததும் உடனடியாக முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அங்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் வரை ஓடிச்சென்றது. ஆனால், வழியில் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்களும் வந்து, அங்கு பதிவாகி இருந்த கை ரேகைகளை பதிவு செய்தனர்.
பின்னர் பிரவீன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிரவீன்குமாரின் மூத்த அண்ணன் வினோத் (28). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பா என்பவரின் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாம். இதனை பலமுறை செல்லப்பா கண்டித்தாராம்.
கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி செல்லப்பா வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மனைவியை, வினோத் வந்து சந்தித்தாராம், அப்போது அங்கு வந்த செல்லப்பா வினோத்தை கண்டித்து அனுப்பியதுடன் தனது வீட்டை உடனடியாக காலி செய்துவிட்டு குடும்பத்துடன் ஏரல் அருகே உள்ள மாரமங்கலம் கிராமத்திற்கு சென்றாராம்.
இந்த நிலையில், செல்லப்பா நேற்று வினோத்தை தேடி முத்தையாபுரம் அய்யன் கோயில் தெரு பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றதார். ஆனால் வீட்டில் அவர் இல்லாத நிலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரது தம்பி பிரவீன்குமாரை அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு, அங்கிருந்து செல்லப்பா தப்பி ஓடியிருக்கிறார். இதில் பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே துடி, துடிக்க உயிரிழந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையை தொடர்ந்து முத்தையாபுரம் போலீசார் உடனடியாக செல்லப்பாவை கைது செய்தனர். அண்ணனின் திருமணத்தை மீறிய உறவால், தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications