"அந்த ஒரு வார்த்தையால் அஜிதா அக்கா உடைஞ்சிட்டாங்க"! தற்கொலை முயற்சி குறித்து ஆதரவாளர்கள் வேதனை
தூத்துக்குடி: தவெக பெண் நிர்வாகி அஜிதா தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது குறித்து அவரது ஆதரவாளர்கள் மனவேதனையுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அஜிதாவின் ஆதரவாளர்கள் கூறியிருப்பதாவது: உழைத்ததற்காக பதவி கேட்டவங்களுக்கு திமுக கைக்கூலினு சமூகவலைதளங்களில் பட்டம் கட்டுனாங்க. அதுலதான் அக்கா மனசு உடைஞ்சிட்டாங்க! என தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக அஜிதா ஆக்னல் 15 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாராம். அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
நீண்ட நாட்களாக பணியாற்றும் தனக்கு தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்பதால் தவெக தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்திய நிலையில் விஜய்யின் காரை வழிமறித்து போராட்டம் நடத்தினார். பின்னர் தவெக அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.
எனினும் அவருக்கு விஜய் எந்த பதவியையும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அஜிதாவுக்கு ஏன் பதவி தரவில்லை என்பது குறித்து புதிதாக தேர்வான தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் சாமுவேல் கூறியிருப்பதாவது: "தளபதியும், பொதுச் செயலாளரும் என் வேலையை பார்த்து பொறுப்பு வழங்கியுள்ளனர். நான் அவர்களுக்கு விசுவாசமாக இருந்தேன். அஜிதா கட்சிக்கு எதிராக சென்றுவிட்டார். தளபதி காரை மறித்தது பெரிய குற்றம். இதை அவர் செய்திருக்க கூடாது. கட்சியில் இருந்து இந்த செயலில் ஈடுபட்டிருக்க கூடாது.
எல்லோருமே ஒருங்கிணைந்துதான் செயல்பட்டோம். அவர் மட்டும் தனியாக எதுவும் செய்யவில்லை. ஒவ்வொரு முறையும் அவருக்கு கட்சி நிறைய வாய்ப்புகளை வழங்கியது. ஒவ்வொருமுறையும் அவர் கட்சியை அசிங்கப்படுத்தி சென்றார். இது வெளியில் யாருக்கும் தெரியவில்லை. அதை எங்கள் கட்சியும் வெளிப்படுத்தவில்லை.
இது அவசரமாக நியமிக்கப்பட்ட பதவி இல்லை. கடந்த 6 மாதங்களாக சென்னை வந்து சென்று கொண்டிருந்தோம். அஜிதாவால் தான் பதவி நியமனம் செய்ய தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இங்கு கோஷ்டி அரசியல் எல்லாம் நடக்காது. எல்லோரும் ஒருங்கிணைந்துதான் பணியாற்றுவோம்." என்றார்.
அது போல் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட அனுசியா கூறியிருப்பதாவது: ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்று கூட பார்க்காமல் எங்கள் தலைவர் விஜய் காரை மடக்கினார். அஜிதாவிடம் தூத்துக்குடி மத்தி, ஒட்டப்பிடாரத்தை பார்த்துக்க சொன்னாங்க. ஆனால் இவங்க தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் 6 தொகுதிகளையும் கேட்டாங்க. இதுதான் குளறுபடிக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அஜிதா மருத்துவமனையில் இருப்பதாக உண்மையில் என்ன பிரச்சினை என்பது அவர் தெரிவித்தால் மட்டுமே தெரியும். இந்த நிலையில் அஜிதா, விஜய் காரை வழிமறித்ததால் தவெகவினர், அவரை திமுகவின் கைக்கூலி என விமர்சித்து வருகிறார்கள். இது அஜிதாவுக்கு மன உளைச்சலை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. கட்சிக்கு உண்மையாக இருந்த நிலையில் தற்போது இப்படிப்பட்ட பெயரை சுமத்துகிறார்களே என்ற விரக்தியில் அவர் தற்கொலை முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications