தேமுதிகவுடன் மநீம கூட்டணியா? விஜயகாந்தை சந்திப்பது பற்றி கமல்ஹாசன் மறைமுக பதில்!
தேமுதிக உடனான கூட்டணி குறித்து சென்னை சென்ற பின் பேசுவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தேமுதிக உடனான கூட்டணி குறித்து சென்னை சென்ற பின் பேசுவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் களத்தில் தற்போது பரபரப்பான தலைவராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாறியுள்ளார். நேற்று திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியது மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது அதிமுக, திமுகவை விமர்சிக்கும் மக்கள் நீதி மய்யம் லோக்சபா தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. இதற்கு தற்போது கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
யார் வேட்பாளர்
தூத்துக்குடியில் கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. முக்கியமான நபர்கள் தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்படுவார்கள். கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் எங்கள் கட்சி சார்பாக போட்டியிடலாம். ஆனால் அதற்கான முழு திறமையும், நிறைய தகுதியும் இருக்க வேண்டும்.
முக்கியமான வேட்பாளர்
விருப்ப மனுக்கள் பெறும் முறை எங்களுக்கு பிடித்து இருந்தது. அதனால் அதை பின்பற்றுகிறோம். மக்கள் பாதி வேட்பாளர்களை தேர்வு செய்வார்கள். நானும், கட்சியினரும் பாதி வேட்பாளர்களை தேர்வு செய்வோம். மக்களுக்கு நல்லது நினைக்கும் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
ரஜினிகாந்த்
எனக்கு வாழ்த்து கூறிய நண்பர் ரஜினிகாந்திற்கு நன்றி. எனக்கு அவர் கூறியது வாழ்த்துதான். அதை ஆதரவாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆதரவு அவர் இனிமேல்தான் தர வேண்டும்.
தேமுதிக கூட்டணி
தேமுதிகவுடன் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதுவரை நாங்கள் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் தொடங்கவில்லை. சென்னை சென்றபின் இதுகுறித்து பேசுவோம், என்று தேமுதிக உடனான கூட்டணி குறித்து கமல்ஹாசன் குறிப்பிட்டார்.