நீ காட்டுகிற நன்றி இதுதானா..? திமுக MLA -வை வறுத்தெடுத்த வைகோ... அறிவாலயம் வரை சென்ற பஞ்சாயத்து..!
தென்காசி: ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக மாற்றும் விவகாரத்தில், சங்கரன்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராஜாவை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போனில் அழைத்து கண்டித்த விவகாரம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இதனிடையே வைகோ தன்னிடம் பேசிய விதம் குறித்து தென்காசி திமுக மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் மூலம் அவர் தலைமைக்கு புகார் கூறிய நிலையில், அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
வைகோவை பொறுத்தவரை எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர் என்பதால், அவர் பேசியதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்கிற ரீதியில் திமுக தலைமை கருதுவதாக தெரிகிறது.

சங்கரன்கோவில்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி வருகிறது. மாதத்தின் பாதி நாட்களை கலிங்கப்பட்டியில் கழிக்கும் வைகோ, ஊரின் வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து பல்வேறு பணிகளை செய்து கொடுத்திருக்கிறார். அந்த வகையில் கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூட பல லட்சங்கள் சொந்த நிதியை செலவழித்திருக்கிறார். இந்நிலையில் அந்த மையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த அவர் முயற்சி செய்து வந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ.ராஜா வேறொரு ஊரில் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

இடம் மாற்றம்
கலிங்கப்பட்டிக்கு பதிலாக குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ள சாயமலை என்ற ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்ற ராஜா எம்.எல்.ஏ. பரிந்துரை செய்ததன் பேரில், சுகாதாரத்துறை தரப்பில் இருந்து அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதையறிந்து ஆவேசமடைந்த வைகோ, சொந்த ஊருக்கு அரசு மருத்துவமனைக் கூட அமைத்துக் கொடுக்காவிட்டால் இவ்வளவு காலம் அரசியலில் இருந்து என்ன பயன் என்ற ஆத்திரத்தில், சங்கரன்கோவில் திமுக எம்.எல்.ஏ.ராஜாவை போனில் வறுத்தெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வைகோ ஆவேசம்
''உன்னை வெற்றிபெற வைத்ததற்கு, நீ காட்டுகிற நன்றிக்கடனா இது'' எனத் தொடங்கிய வைகோ ஒரு கட்டத்தில் ''உனது அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுவேன்'' என திமுக எம்.எல்.ஏ.ராஜாவை சாடியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த உரையாடலை பதிவு செய்த ராஜா எம்.எல்.ஏ. திமுக மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் மூலம் தலைமைக்கு புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனிடையே சொந்தநலனுக்காக வைகோ சண்டை போடவில்லை என்பதாலும் பிறந்த ஊருக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆவலில் அவர் இப்படி நடந்துகொண்டதாலும் இவ்விவகாரத்தில் திமுக தலைமை பெரிதாக எந்த ரியாக்ஷனையும் காட்டவில்லை எனக் காரணம் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்தது என்ன?
மேலும், இந்த விவகாரத்தை மேலும் பெரிதுபடுத்தாமல் இத்தோடு விடுமாறு ராஜா எம்.எல்.ஏ.வுக்கு அறிவாலயம் தரப்பிலிருந்து அறிவுறுத்தல் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சங்கரன்கோவில் தொகுதியை பொறுத்தவரை 30 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் திமுக வெற்றிபெற்றிருக்கிறது. இதனிடையே கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்றும் விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மேற்கொண்டு என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications