ஆர்.கே.நகரில் கே.பி.முனுசாமி அல்லது பண்ருட்டியாரை வேட்பாளரை அறிவிக்க வன்னியர் அமைப்புகள் கோரிக்கை
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக கே.பி. முனுசாமி அல்லது பண்ருட்டி ராமச்சந்திரனை அறிவிக்க வேண்டும் என வன்னியர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி அல்லது பண்ருட்டி ராமச்சந்திரனை அறிவிக்க வேண்டும் என வன்னியர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என்பது முடிவாகவில்லை.
இதனிடையே சென்னையில் நேற்று நடைபெற்ற வன்னியர் சத்தியர்கள் கூட்டு இயக்கத்தின் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி அல்லது பண்ருட்டி ராமச்சந்திரனை வேட்பாளராக அறிவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தாவிட்டால் அதிமுகவில் உள்ள வன்னியர்கள் ஆதரவும் நடுநிலையான வன்னியர்கள் ஆதரவும் வேறு திசை நோக்கி செல்லும்; அதிமுக நிலைப்பாட்டுக்கு ஏற்ப டிசம்பர் 2-ல் நடைபெறும் வன்னிய தலைவர்கள் கூட்டத்தில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.