பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த விவகாரம்.. அல்லேரி மலைகிராமத்தில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதி
வேலூர்: வேலூரில் பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக மலை கிராமத்தில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் இருக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த அல்லேரி மலை, அத்திமரத்துகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி. இவரதுமனைவி பிரியா. இவர்களது ஒன்றரை வயது மகள் தனுஷ்கா.
இவரை கடந்த மாதம் 27ஆம் தேதி பாம்பு கடித்துவிட்டது. இதையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு வாகனத்தில் தூக்கி கொண்டு செல்ல முறையான சாலை வசதி இல்லை. அதனால் அந்த குழந்தையை 10 கிமீ, தூரம் நடந்தே தூக்கி கொண்டு வந்தனர்.

அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸில் தங்கள் கிராமத்திற்கு சென்ற போது சாலை வசதி இல்லாததால் பாதியிலேயே டிரைவர் இவர்களை இறக்கிவிட்டுவிட்டார். இதனால் அந்த குழந்தையை 10 கி.மீ தூரத்திற்கு தூக்கிக் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து அந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்த சம்பவத்தின் எதிரொலியாக அல்லேரி மலை கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட்டார்.
அதன் படி அல்லேரி மலை கிராமத்திறகு சென்று வரும் வகையில் ஜீப் வடிவிலான ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டது. அந்த ஆம்புலன்ஸ் வாகனம் 24 மணி நேரமும் அந்த கிராமத்திலேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. யாருக்காவது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு பின்னர் அவர்களை கீழே அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கிராமத்திற்கு சாலை வசதி அமைக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications