பணிமாறுதல் பெற்ற 5 ஆசிரியர்கள்... கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட அரசுப்பள்ளி மாணவிகள்.. நெகிழ்ச்சி
வேலூர்: கே.வி.குப்பம் அரசுப்பள்ளியில் பணியிட மாறுதல் பெற்ற 5 ஆசிரியர்களுக்காக பள்ளி மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதது காண்போரை நெகிழ செய்துள்ளது
Recommended Video
நம்மில் ஒவ்வொருவருக்கும் பள்ளி பருவங்களில் மனதுக்கு பிடித்தமான ஆசிரியர்கள் இருப்பார்கள். பள்ளியை விட்டு விலகும்போதும் வகுப்பு மாறிச்செல்லும்போதும் நமது நண்பர்களைவிட்டு பிரியும் சமயம் எவ்வளவு வேதனை இருக்குமோ அதேபோன்ற வேதனை சில ஆசிரியர்களைவிட்டு பிரியும்போதும் ஏற்படும்.
பள்ளி பருவங்களில் கேலி கிண்டல் செய்த ஆசிரியர்களின் அருமையை நம்மில் பலர் பள்ளி பருவத்தை கடந்த பின்னர் உணர்ந்திருப்போம். அதன் வெளிபாட்டை ஆசிரியர் தினத்தன்று பலர் வைக்கும் வாட்ஸ் அப், பேஸ்புக் ஸ்டேட்டஸ்களில் காணலாம்.

வேலூரில் முன்மாதிரி ஆசிரியர்கள்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு புனிதா, கார்த்திகேயன், ஜெயந்தி, தனலஷ்மி, சுகந்தி ஆகிய 5 ஆசிரியர்கள் வகுப்பெடுத்து வந்து உள்ளனர். இவர்களில் புனிதா மற்றும் கார்த்திகேயன் கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாகவும் மற்றவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாகவும் பணிபுரிந்து வருகின்றனர். 5 ஆசிரியர்களின் சிறப்பான செயல்பாடால் மாணவிகள் மிகவும் விரும்பி பள்ளிக்கு வருவதுடன் ஆர்வமாக வகுப்புகளையும் கவனித்து வந்து உள்ளனர்.

மாணவிகளை அதிர வந்த ட்ரான்ஸ்பர் உத்தரவு
இந்நிலையில் ஆசிரியர் கார்த்திகேயன் பெண்ணாத்தூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் ஆசிரியை தனலட்சுமி வேலப்பாடி மேல்நிலைப்பள்ளிக்கும், ஆசிரியை புனிதா காங்கேயநல்லூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், ஜெயந்தி என்ற ஆசிரியர் லத்தேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், சுகந்தி என்ற ஆசிரியர் ஆற்காடு தோப்புக்காடு உயர்நிலைப் பள்ளிக்கும் மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை கடந்த செவ்வாய்கிழமை உத்தரவு அனுப்பியது.

கண்ணீர் விட்டு அழுத மாணவிகள்
இதனையடுத்து நேற்று நண்பகல் மதியம் பணிமாறுதல் பெற்ற 5 ஆசிரியர்களும் பள்ளியைவிட்டு சென்றுள்ளனர். அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் இருந்து வெளியே வரும்போது மாணவிகள் வெளியே செல்லாதபடி சுற்றி வளைத்து, கட்டிப்பிடித்து அழுதனர். வேறு பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்றும், இந்த பள்ளியிலேயே இருக்குமாறும் மாணவிகள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்த ஆசிரியர்கள் மாணவிகளை நன்றாக படிக்க வேண்டும் என அறிவுறுத்திவிட்டு அழுதுகொண்டே அங்கிருந்து விடைபெற்றனர். இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

திருவள்ளூர் பகவான் ஆசிரியர்
இதேபோல் கடந்த 2019 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி மாணவர்களின் அன்பை பெற்ற ஆசிரியர் பகவான் பணிமாறுதல் செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் ஆசிரியரை அங்கிருந்து வெளியேறவிடாமல் பாசப் போராட்டம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை கண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன், நடிகர் விவேக் உள்ளிட்டோர் ஆசிரியர் பகவானுக்கு பாராட்டு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications