வேலூரில் அடுத்தடுத்து இறந்த 7 ஆயிரம் வாத்துகள்... பறவை காய்ச்சல் காரணமா!
வேலூர்: வேலூர் மாவட்டம் திருவலம் அருகே 7 ஆயிரம் வாத்துக் குஞ்சுகள் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தன.
Recommended Video
கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் வாத்துக் குஞ்சுகள் இறந்தது பீதியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள சஞ்சீவிராயபுரத்தை சேர்ந்தவர் சுதாகர். இவர் கடந்த 30 ஆண்டுகளாக வாத்துக்களை வளர்த்து வருகிறார். கடந்த 40 தினங்களுக்கு முன்பாக தர்மபுரியில் இருந்து 7 ஆயிரம் வாத்துக் குஞ்சுகளை வாங்கி வேலூர் பெருமுகை அருகே பாலாற்றங்கரையில் கூடாரம் அமைத்து மேய்த்து வந்தார்.
பாலாற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் வாத்து குஞ்சுகள் மேய்ந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் வாத்து குஞ்சுகள் ஒவ்வொன்றாக திடீரென இறந்து மிதந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் அந்த வாத்துகள் அனைத்தும் பரிதாபமாக இறந்தன.
வாத்துகள் திடீரென பலியானது குறித்து கால்நடைத்துறையிடம் விசாரித்த போது கேரளாவிலிருந்து வாத்துகள் கொண்டுவரப்பட்டிருந்தால் பறவைகாய்ச்சலாக இருக்கலாம் இல்லையென்றால் ஆய்வுக்கு பின்னரே என்ன நோய் என தெரியவரும் என்று கூறினார். நமது அண்டை மாநிலமான கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.