அதெப்படி திமிங்கலம்.. பரீட்சையே எழுதாமல் தேர்ச்சி.. வேலூரில் 10 வகுப்பு தேர்வு முடிவில் விசித்திரம்
வேலூர்: வேலூரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் செய்முறை தேர்வு எழுதிய மாணவி தேர்வு எழுதவே இல்லை என்று வந்ததால் தோல்வி அடைந்துள்ளார். அதேநேரம் பள்ளிக்கே வராமல் தேர்வே எழுதாத மாணவன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு செய்முறை தேர்வு எழுதிய மாணவி தோல்வியடைந்ததாகவும், பள்ளிக்கே வராத மாணவர் தேர்ச்சி பெற்றதாகவும் முடிவு வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் எம்.ஜி.ஆர். நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 57 பேர் தேர்வு எழுதினர். இதில் 33 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.. இப்பள்ளியில் படித்த மாணவி வைஷ்ணவி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அறிவியல் பாடத்திற்கு செய்முறை தேர்வு எழுதியிருந்தார். இதற்கு 100 மதிப்பெண்களுக்கு 25 மதிப்பெண்கள் என பள்ளி சார்பில் போட்டிருக்கிறார்களாம். மேலும் எழுத்துத் தேர்வில் இவர் 75 மதிப்பெண்களுக்கு 21 மதிப்பெண்கள் பெற்று இருந்தார்.
இந்தநிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வு எழுதிய மாணவி வைஷ்ணவி, தேர்வு எழுதவில்லை என வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடப்பட்டுள்ளது. இதனால் மாணவி வைஷ்ணவி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது.
ஆனால் பல மாதங்களாக பள்ளி பக்கமே வராமல், பொதுத்தேர்வு கூட எழுதாத தருண் என்ற மாணவர் செய்முறை தேர்வு எழுதியதாகவும், இவருக்கு 25 மதிப்பெண்கள் வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனை அறிந்த மாணவி வைஷ்ணவி அதிர்ச்சியடைந்தார்.
நேற்று உடனடியாக மாணவி வைஷ்ணவியின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசனிடம் முறையிட்டு நியாயம் கேட்டுள்ளனர். அதற்கு தலைமையாசிரியர் கூறுகையில், மாணவி வைஷ்ணவி செய்முறை தேர்வு எழுதியிருந்தார். அவர் தேர்வு எழுதிய பதிவுகள் பள்ளியில் இருக்கின்றன. கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும்போது தவறுதலாக மாணவி வைஷ்ணவி பெற்ற செய்முறை தேர்வின் மதிப்பெண்கள் மாணவன் தருண் பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று விளக்கம் அளித்தார்.
இது குறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிமொழியின் கவனத்திற்கு தலைமை ஆசிரியர் கொண்டு சென்றார். இதனிடையே இது போன்ற தவறுதலான பதிவேற்றங்கள் வேலூர் மாவட்டத்தில் மேலும் 5 பள்ளிகளில் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது என்று முதன்மை கல்வி அதிகாரி மணிமொழி கூறினார். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் திகைப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications