வாணியம்பாடி நர்மதா.. காதல் கணவன் கண்முன்னே.. நடந்த கடத்தல்.. தேடும் தனிப்படை போலீஸ்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே காதல் கல்யாணம் செய்த ஒன்றரை மாதத்தில் பெண்ணை கடத்தி சென்றதாக அவரது தந்தை, அண்ணன்கள், ஊராட்சி மன்ற தலைவர் மீது இளம் பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் பகுதியை சேர்ந்த 21 வயதாகும் தியாகு அதே கிராமத்தை சேர்ந்த மாற்று சாதியைச் சேர்ந்த நர்மதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். நர்மதாவும் தியாகுவும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறியதுடன், கடந்த டிசம்பர் மாதம் 6-ந் தேதி கல்யாணம் செய்துகொண்டார்.

இதனிடையே நர்மதாவின் பெற்றோர் தனது பெண்ணை காணவில்லை என திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் காரணமாக திருமணம் நடந்த மறுநாளே அதாவது டிசம்பர் 7-ந் தேதியே தியாகு மற்றும் நர்மதாவை போலீசார் கண்டுபிடித்து வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நர்மதாவை அவரது காதல் கணவர் தியாகுவுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து தியாகு உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி தனது மனைவியுடன் தர்மபுரி மாவட்டத்தில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் தியாகுவிற்கு அழைத்த நர்மதாவின் பெற்றோர்கள் மற்றும் அண்ணன்கள் கொலை மிரட்டல் விடுத்து பேசி வந்தார்களாம். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தியாகு தனது சொந்த ஊரான சங்கராபுரம் பகுதிக்கு பொங்கல் கொண்டாட மனைவியுடன் வந்திருக்கிறார்.
இந்நிலையில் நர்மதாவும் தியாகுவும் வந்திருப்பதை அறிந்த நர்மதாவின் பெற்றோர், மற்றும் அவரது உறவினர்கள், நேற்று தியாகுவின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று தியாகு மற்றும் அவரின் பெற்றோரை அடித்து தள்ளிவிட்டு நர்மதாவை வலுக்கட்டயமாக கடத்திச்சென்று விட்டார்களாம்.
தனது மனைவி நர்மதாவை அவரது தந்தை ராஜேந்திரன், அண்ணன்கள் கோவிந்தராஜ், பிரபு, ராஜேஷ் மற்றும் அந்த பகுதி கிராம ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் கடத்திச் சென்றதாக அம்பலூர் காவல் நிலையத்தில் தியாகு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நர்மதாவை கடத்திச் சென்றதாக அவரது தந்தை மற்றும் அண்ணன்கள் என 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அம்பலூர் போலீசார், நர்மதா மற்றும் அவரது பெற்றோர், அண்ணன்களை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். சாதி மாறி திருமணம் செய்த இளைஞரை தாக்கிவிட்டு, திருமணம் செய்த பெண்ணை அவரது பெற்றோர் கடத்தி சென்ற சம்பவம் வாணியம்பாடி சங்கராபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications