இந்திய ஜனநாயக புலிகள் கட்சி.. அட நம்ம மன்சூர் அலிகான்.. வேலூர்ல பலாப்பழம், பேட், லாரி!
வேலூர்: வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து இந்திய ஜனநாயக புலிகள் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகான் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது விளக்கமளித்துள்ளார்.
மன்சூர் அலிகான் அந்த பகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார். தனது பிரச்சாரங்களில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். செல்லும் இடங்களில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவும் தயார். ஆனால் அவர்கள் தொகுதி ஒதுக்கீடு செய்தால் நான் போட்டியிடுவேன் என மன்சூர் தெரிவித்து வருகிறார்.

தமிழகத்திற்கு நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, பாஜக, என மும்முனை போட்டி நடைபெறும். அது போல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
இப்படி பலதரப்பட்ட போட்டிகள் நிலவும் சூழலில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை தொடங்கியுள்ளார் மன்சூர் அலிகான். இவர் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சித்து வருகிறார்.
ஆனாலும் அவர் வேலூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டது. இதில் முதல் ஆளாக வேலூர் தொகுதிக்கான வேட்புமனுவை மன்சூர் அலிகான் தாக்கல் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எத்தனையோ கட்சிகள் எத்தனையோ இடங்களில் போட்டியிடட்டும்.
ஆனால் நான் இந்த தொகுதியில் மட்டும்தான் போட்டியிடுகிறேன். ஏனெனில் எனக்கு வேலூரை விட்டால் வேறு வழியில்லை. வேலூர் மக்களுக்கும் என்னை விட்டால் வேறு வழியில்லை. நான் நல்ல வேலைக்காரனாக உழைப்பேன், உங்களுக்காக கழுதை போல் பொதி சுமப்பேன்.
இந்திய ஜனநாயக புலிகள்தான் என் கட்சி. ஆனால் இதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. அதற்கு சில மாதங்கள் ஆகும். தற்போது சுயேச்சையாகத்தான் நிற்கிறேன். தேர்தல் சின்னமாக பலாப்பழம், கிரிக்கெட் பேட், லாரி உள்ளிட்டவைகளை கேட்டுள்ளேன்.
லாரிக்கு தமிழில் சரக்கு உந்து என்ற பெயர். சரக்கு என்றால் அந்த சரக்கு இல்லை. ஒரு வேளை பலாப்பழம் சின்னம் கிடைத்தால் தலையில் வச்சிட்டு ஓட்டு கேட்கப் போகிறேன் என நகைச்சுவையாக மன்சூர் அலிகான் தெரிவித்தார்.
திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்தவர் மன்சூர் அலிகான். இவர் காமெடியிலும் கலக்கியவர். தமிழ் மண் மீது பற்றுக் கொண்ட மன்சூர் அலிகான், தமிழக மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற ஒரு கட்சியை தொடங்கியுள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முதலில் ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதாக கூறியிருந்த அவர் தற்போது தான் வேலூரில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதற்காக வேலூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். நாளை மறுநாள் முதல் தமிழகத்திற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
அதிமுக கூட்டணி: இந்த நிலையில் அவர் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவரது சொந்த கட்சியிலிருந்தே அவரது தலைவர் பதவி பறிக்கப்படுவதாக ஒரு அறிக்கை பொதுச் செயலாளர் கண்ணதாசன் பெயரில் வந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் மன்சூர் அலிகான் நீக்கம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: கண்ணதாசன் பொதுச் செயலாளரே இல்லை. அவர் ஆபிஸ் பாய், என்னுடன் எங்கு சென்றாலும் "அண்ணா அண்ணா" என அழைத்துக் கொண்டு வருவார். எனது அலுவலகத்தில் இருந்த ரப்பர் ஸ்டாம்புகள், 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப் திருடப்பட்டுள்ளது என பரபரப்பு புகாரை அளித்தார். மேலும் கண்ணதாசன் மீது கட்சியினர் யாரும் கோபம் கொள்ள வேண்டாம் என்றும் மன்சூர் அலிகான் கேட்டுக் கொண்டார். எனினும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ரப்பர் ஸ்டாம்ப், லேப்டாப் காணவில்லை என்பது குறித்து மன்சூர் அலிகான், கண்ணதாசன் மீது புகார் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications