வேலூர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா.. ரசிகர்களை நெகிழ வைத்த சம்பவம்
வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயிலில் நடிகர் சூர்யா இன்று சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் கங்குவா பட இயக்குனர் சிறுத்தை சிவாவும் சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் சூர்யா கோயிலுக்கு வந்த தகவலை கேட்டு ஏராளமான ரசிகர்கள் அவரை பார்க்க ஓடி வந்தனர். சிலர் ஓடிப்போய் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் (வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை) புகழ் பெற்ற திருக்கோவில்களில் ஒன்று என்றால், சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலை குறிப்பிடலாம் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையத்தில் 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இந்த கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில் ஆகும். 750 அடி உயரத்தில், 1305 படிக்கட்டுகளுடன் கடிகாசலம் எனும் ஒரே மலை குன்றின் மீது 200 அடி நீளம், 150 அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இங்கு லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இவருடன் அமிர்தவல்லி தாயாரும் பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார். இந்த கோயில் எப்படி என்றால், வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் 2 திருச்சுற்றுகள் கொண்ட மிக அழகான கோயிலாகும்.

மற்ற பெருமாள் கோவில்களில் இருந்து இந்த கோயில் முற்றிலும் மாறுப்பட்டது. ஏனெனில் சோளிங்கரில் மட்டுமே நரசிம்மர், கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் வீற்றிருப்பார். சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன், இருகால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப்பட்டையுடன் லட்சுமி நரசிம்மர் காட்சி தருகிறார். இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். பெரிய பிரபலங்கள் பலருக்கும் மிகவும் பிடித்த கோயிலாகும்.

அந்த வகையில் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நடிகர் சூர்யா சாமி இன்று சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் கங்குவா பட இயக்குனர் சிறுத்தை சிவாவும் சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் சூர்யா கோயிலுக்கு வந்த தகவலை கேட்டு ஏராளமான ரசிகர்கள் அவரை பார்க்க ஓடி வந்தனர். சிலர் ஓடிப்போய் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். நடிகர் சூர்யா எல்லோரிடமும் செல்பி எடுத்துக் கொண்டார். இதை கண்டு ரசிகர்கள் நெகிழ்ந்தனர்.

பெருமாள் சுவாமியை தரிசனம் செய்ய சிறுத்தை சிவாவும், நடிகர் சூர்யாவும் ரோப் காரில் சென்றனர். மேலே கோயிலில் பயப்பக்தியுடன் சாமி கும்பிட்ட அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அங்கு கோயிலில் சுவாமியை தரிசனம் செய்த பின்னர். சிறிதுநேரம் சிறுத்தை சிவாவும், சூர்யாவும் அங்கேயே இருந்தனர். அதன்பின்னர் ரோப் கார் மூலம் புறப்பட்டு தரைக்கு சென்றனர். பின்னர் கார் மூலம் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.













Click it and Unblock the Notifications