எடப்பாடி பழனிசாமி பற்றி இழிவாக பேசி வீடியோ.. திமுக பேச்சாளர் மீது அதிமுகவினர் அடுத்தடுத்து புகார்!
வேலூர் : முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்ட திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுகவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், பேச்சாளருமான குடியாத்தம் குமரன் கடந்த சில நாட்ளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பதிவிட்ட அவதூறு வீடியோ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுகவினர் புகார் மனுக்களை அளித்தனர்.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வேலூர் மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு முன்னிலையில் குடியாத்தம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சிவா அளித்துள்ள மனுவில், "முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் குடியாத்தம் குமரன் பேசிய வீடியோ கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் பகிரப்பட்டு வருகிறது. அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதுடன் அந்த வீடியோவை தடை செய்ய வேண்டும்" எனக் கோரியுள்ளார்.
அதேபோல, குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் குடியாத்தம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் வி.ராமு அளித்துள்ள புகார் மனுவில், "முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் அவதூறாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட குடியாத்தம் குமரன் மீதும் வீடியோவை வெளியிட்ட யூடியூப் சேனல் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் பொள்ளாச்சி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி அருண்குமார் என்பவரை காட்பாடி காவல்துறையினர் அண்மையில் கைது செய்தனர். இந்நிலையில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி மீது அதிமுகவினர் அடுத்தடுத்து புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications