வீடியோ காலில் வந்த விபரீதம்.. இன்ஸ்டா இளைஞரால் கதறிய வேலூர் இளம்பெண்.. ஆக்ஷன் எடுத்த போலீஸ்
வேலூர்: இன்ஸ்டாவில் பழகி இளம்பெண்ணின் போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியதுடன், வீடியோ காலில் வந்து ஆபாசமாக பேச சொல்லி இளைஞர் செய்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
சமீபகாலமாக இன்ஸ்டா, பேஸ்புக் மூலமாக பெண்களிடம் பேசி பணம் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன் பின் தெரியாத நபர்களிடம் நண்பர்களாகப் பழகும் போக்கு இப்போது வெகு சாதாரணமாகிவிட்டது. இதனால் பல்வேறு சிக்கல்களில் சிக்குவதும் அதிகரித்து வருகின்றன.

அறிமுகம் இல்லாத நபர்களிடம் போட்டோ மற்றும் தங்களின் சுய தகவல்களைப் பகிர வேண்டாம் என சைபர் போலீஸார் எச்சரித்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில், இன்ஸ்டாவில் பழகிய பெண்ணின் போட்டோக்களை மார்பிங் செய்து, வீடியோ காலில் ஆபாசமாகப் பேசி ரெக்கார்டு செய்து பணம் கேட்டு மிரட்டிய இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர், ஹுலிமாவு பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான ஸ்ரீநாதா. இவருக்கும், வேலூரைச் சேர்ந்த பெண்ணுக்கும் இன்ஸ்டாவில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தான் மிகவும் நல்லவன் என்பதுபோல அப்பெண்ணிடம் ஸ்ரீநாதா நடந்து கொண்டிருந்துள்ளார். நாளடைவில் இவர்களது பழக்கம் நட்பாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் ஸ்ரீநாதாவை நம்பி தன்னுடைய போட்டோக்களை அப்பெண் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீநாதா அந்த இளம்பெண்ணின் போட்டோக்களை மார்பிங் செய்து நிர்வாணமாக இருப்பது போல மாற்றியுள்ளார். பின்னர் அந்த புகைப்படத்தை அந்தப் பெண்ணுக்கே இன்ஸ்டாவில் அனுப்பியுள்ளார். இதைப் பார்த்ததும் அதிர்ந்து போன அந்தப் பெண் என்ன செய்வது, வெளியில் எப்படி சொல்வது என்று தெரியாமல் தவித்துள்ளார்.
ஒரே ஒருமுறை வீடியோ காலில் வந்து பேசு. இல்லையெனில் உன்னுடைய ஆபாச புகைப்படங்களை ஆபாச இணையதளப் பக்கத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார் ஸ்ரீநாதா. இந்த மிரட்டலுக்கு மிரண்டு போன இளம்பெண்ணும் வீடியோ காலில் வந்து பேசியுள்ளார்.
அந்த சமயத்தில் ஸ்ரீநாதா தவறான எண்ணத்துடன் இளம்பெண்ணுடன் பேசியுள்ளார். பேசியதோடு மட்டுமல்லாமல் ஆபாசமாக நடந்து கொள்ளச் சொல்லியிருக்கிறார். இளம்பெண்ணும் அவர் சொன்னபடி நடந்துகொண்டுள்ளார். இந்நிலையில் அந்தக் காட்சிகளை அப்படியே ஸ்ரீநாதா அப்பெண்ணுக்குத் தெரியாமல் ரெக்கார்டிங் செய்துள்ளார்.
பின்னர், அந்த ஆபாச வீடியோ கால் ரெக்கார்டையும் இளம்பெண்ணுக்கு அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். புகைப்படம் ஆபாசமாக சித்தரித்ததில் இருந்து தப்புவதற்காக வீடியோ கால் பேசிய நிலையில் அதிலும் பிரச்னை வந்ததில் பயந்துபோயுள்ளார் அப்பெண். பின்னர், தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து அப்பெண் மற்றும் பெற்றோர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணனிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில், சைபர் க்ரைம் போலீஸார் ஸ்ரீநாதாவை கண்டுபிடித்து நேற்று கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக போலியான கணக்குகளைத் தொடங்கி பல பெண்களை இவர் ஏமாற்றி பணப் பறிப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஸ்ரீநாதா நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுபோன்ற முன் பின் தெரியாத நபர்களிடம் பேசுவதையும், போலி கணக்குகளில் இருந்து வரும் குறுச்செய்திகளை நம்பி பெண்கள் ஏமாற வேண்டாம் என்றும் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications