கெமிக்கல் இஞ்சினியர் டூ அதிமுக வேட்பாளர்... துரைமுருகனுக்கு டஃப் தந்த ராமுவின் பின்னணி இது தான்..!
வேலூர்: காட்பாடி தொகுதியில் துரைமுருகனுக்கு கடும் நெருக்கடி கொடுத்ததன் மூலம் தமிழக அரசியல் களத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் ராமு.
யார் இந்த ராமு, அவருக்கு எப்படி இவ்வளவு செல்வாக்கு என்பதை அறிந்துகொள்வதில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
துரைமுருகனுக்கு எதிராக அதிமுக டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளது எனக் கூறப்பட்ட நிலையில், தான் டம்மியல்ல என்பதை தேர்தல் முடிவின் மூலம் நிரூபித்துள்ளார் ராமு.

பொறியியல் படிப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கொண்டசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்தவர் ராமு. பி.இ. கெமிக்கல் இஞ்சினியரிங் முடித்துள்ள இவர், மூன்று முறை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்திருக்கிறார். பொதுமக்களுடன் நெருங்கிப் பழகுவதில் கெட்டிக்காரர். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உதவி நிமித்தமாக ராமுவை சந்தித்தால் அவர்களுக்கு உதவி கேரண்டி.

மனம் தளராமல்
இதனாலேயே இவருக்கு கட்சியை கடந்தும் ஆதரவு பெருகியது. ஒரு கட்டத்தில் இவர் குறித்த தகவல் ஜெயலலிதா வரை சென்றதால், ராமுவுக்கு மாவட்டச் செயலாளர் பதவியும் 2015-ல் தேடி வந்தது. ஓராண்டு காலம் மாவட்டச் செயலாளராக இருந்த அவர் மீண்டும் ஒன்றியச் செயலாளராக டி புரோமோஷன் செய்யப்பட்டார். ஆனாலும் மனம் தளராமல் பணியாற்றி அரசியலில் தனக்கான ஆதரவாளர்கள் வட்டத்தை விரிவாக்கிக் கொண்டார்.

தன்மானப் பிரச்சனை
வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக உள்ள அவருக்கு துரைமுருகனை எதிர்த்து போட்டியிட இந்தமுறை வாய்ப்புக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது ராமு டம்மி வேட்பாளர் என்றும், துரைமுருகன் வெற்றிக்காக அதிமுக தலைமையின் அட்ஜெஸ்ட்மெண்ட் எனவும் தகவல்கள் உலா வரத் தொடங்கின. இதனை தன்மானப் பிரச்சனையாக எடுத்துக் கொண்ட ராமு, தான் டம்மியல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தல் பணியாற்றி இறுதி வரை துரைமுருகனுக்கு கடும் போட்டியை கொடுத்தார்.

அரைநூற்றாண்டு
வெறும் 746 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகனிடம் ராமு வெற்றியை பறிகொடுத்திருந்தாலும் அது வெற்றிகரமான தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. அரைநூற்றாண்டு கால சட்டமன்ற அனுபவம் உடைய அரசியல் ஜாம்பவனான துரைமுருகனையே, வாக்கு எண்ணிக்கை நாளன்று பலமுறை தண்ணீர் குடிக்க வைத்துவிட்டார் ராமு.

சுணக்கமின்றி
ராமு இந்தளவுக்கு துரைமுருகனுக்கு நெருக்கடி கொடுத்ததற்கு காரணம் அவரது பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபட்டதும் ஒன்று. மிகப்பெரிய பொறுப்புகளில் இருந்தும், காட்பாடிக்கு துரைமுருகன் என்ன செய்தார், அல்லது உங்களுக்கு தான் அவர் என்ன உதவி செய்தார் என செல்லும் இடங்களிலெல்லாம் கேள்வி எழுப்பி வாக்காளர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பிக்கொண்டார் ராமு.












Click it and Unblock the Notifications