பிரதமரை தரக்குறைவாக பேசலாமா? மன்னிப்பு கேட்க வைத்த நாராயணன் திருப்பதி.. ஓடும் ரயிலில் அதிரடி
பிரதமர் நரேந்திர மோடி தரக்குறைவாக பேசலாமா? ஓடும் ரயிலில் இளைஞரை மன்னிப்பு கேட்ட வைத்துள்ளார் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி.
வேலூர் தமிழ்நாடு பாஜக மாநில துணை தலைவர் நாராயணண் திருப்பதி சேலத்திற்கு ரயிலில் சென்று கொண்டிருந்த போது, ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அவரை நாரயாணன் திருப்பதி மன்னிப்பு கேட்க வைத்து அதை வீடியோவாக ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் சென்னை-கோவை சதாப்தி விரைவு ரயிலில் சென்ற பாஜக மாநில துணை தலைவர் நாராயணண் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில்வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
சென்னை-கோவை சதாப்தி விரைவு ரயிலில் சேலம் சென்று கொண்டிருக்கிறேன். காட்பாடிக்கு முன், பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசியதையடுத்து நான் கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்தேன்.தான் கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்தவன் என்றும் பிரதமரை அப்படித்தான் என்றார்.

பிரதமர் குறித்து பேச்சு
பயணிகளிடமும் விசாரித்து உறுதி செய்த பின்னர், அந்த நபர் (சாமுவேல்ராஜ்) பயணிகளின் முன்னால் பிரதமரை தரக்குறைவாக பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் பலரும் பிரதமர் குறி்த்து தரக்குறைவாக பேசிய நபரை கண்டித்ததனர். இதை பார்க்கும் போது தமிழகம் மாற்றத்தை நோக்கி செல்கிறது என்பதை உணர்த்தியது.

அராஜகம்
விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகளுக்கும், வேகமாக செயல்பட்ட வேலூர் பாஜக மாவட்ட தலைவர் மனோகரன் அவர்களுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும். பிரதமருக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பயணிகளுக்கும் மனமார்ந்த நன்றி. கம்யூனிஸ்டுகளின் அராஜகத்தை வெளிப்படுத்தும் என் பயணம் தொடர்கிறது. " என நாராயணன் திருப்பதி தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.

வீடியோவில் என்ன
இதனிடையே அந்த வீடியோவில், காவல்துறையினர் முன்னிலையில் பேசிக்கொண்டிருந்த நாராயணன் திருப்பதி, என்னை மோசமாக பேசிக்கொண்டிருந்தார். அதை பற்றி கவலையில்லை.ஆனால் இந்த நாட்டினுடைய பிரதமரை தரக்குறைவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். அப்போது அங்கிருந்த ஒரு நபர், நான் பொது இடத்தில் சிலர் பேசினார்கள். அதை நானும் தவறாக புரிந்து கொண்டேன். நானும் அதே கோபத்துடன் பேசியது தவறு தான் என்றார். அதற்கு நாராயணன் திருப்பதி, பிரதமர் குறித்து தரக்குறைவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். அதனையே போலீசாரும் அந்த நபரிடம் வலியுறுத்தினர். இதையடுத்து தான் பிரதமர் குறித்து தரக்குறைவாக பேசியது தவறு தான், மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். இப்படியாக வீடியோ முடிகிறது.

எப்படி உறுதி செய்தீங்க
இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன் ஒருவர், அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்பதை எப்படி பொதுவெளியில் உறுதியாக பதிவிடுகிறீர்கள்? அவரே சொன்னார் என்பீர்கள்.இதேபோல், வேறு யாராவது தரக்குறைவா பேசிட்டு, நான் பாஜக அப்படித்தான் பேசுவேன்னு சொன்னா, உடனே அவர் எங்க கட்சி இல்ல. உறுதிபடுத்தாமல் எப்படி சொல்லலாம் என்பீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்.

வரவேற்பு
இன்னொரு நெட்டிசன், சபாஷ் . வரவேற்கத்தக்க செயல் . ஜனநாயக உரிமை என்று கூறிக்கொண்டு இப்படி சிலர் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது , இதே போன்று சமூக வலைதளங்களில் மிக மோசமாக பதிவிடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நாராயணன் திருப்பதிக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications