வேலூர் வருமானவரி சோதனை.. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு!
வேலூரில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
Recommended Video

வேலூர்: வேலூரில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த வாரம் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். அதேபோல் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கல்லூரியில் நடந்த வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர்.

மொத்தம் மூன்று நாட்கள் இந்த சோதனை நடந்தது. முதல்நாள் சோதனையில் 10 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்ததாக செய்திகள் வந்தது. அதன்பின் வேலூர் அருகே காட்பாடியில் உள்ள சிமெண்ட் குடோனில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதில் 11 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் அதையும் கூட துரைமுருகன் தரப்பு மறுத்தது. அதற்கு மறுநாள் மீண்டும் சோதனை நடந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது. துரைமுருகன் வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனை குறித்த அறிக்கை தற்போது தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக வேலூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம் என்று தமிழக தேர்தல் அதிதாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். யார் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்பது வழக்கு பதிவு செய்யப்படும் போதுதான் தெரியும் என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் தற்போது வேலூரில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது 171(E)-, 171 (B)(2) IPC. 125(A)PPL ACT ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதனால் இவர்கள் விரைவில் விசாரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் இதை காரணம் காட்டி வேலூரில் தேர்தல் நிறுத்தப்படுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications