காட்பாடிக்கு அப் அண்ட் டவுன் ரயில் பயணம்! முதல்வர் ஸ்டாலினின் முதல் கள ஆய்வு! 2 நாள் டூர் சார்ட்!
வேலூர்: கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைத்து அதன் கீழ் வேலூர் மண்டலத்தில் 2 நாள் ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் காட்பாடிக்கு ரயில் மூலம் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
அரசின் அறிவிப்புகள், திட்டங்கள், சலுகைகள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைகிறதா என்பதை அறியவும் ஆட்சியின் பலன்களை எத்தனை பேர் அனுபவிக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளவும் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர்.
முதல்வர் ஸ்டாலினின் 2 நாள் பயண விவரம் வருமாறு;

ரயில் பயணம்
இன்று காலை 10.20க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் நண்பகல் 12.30க்கு காட்பாடி சென்றடைகிறார்.காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து நேராக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் அதன் பிறகு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
இன்று மாலை 5 மணியளவில் விஐடி பல்கலைக்கழகத்துக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு கருணாநிதி பெயரில் புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதி கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.பிறகு மாலை 6.15 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் முதல்வர் ஸ்டாலின், ஒன்றரை மணி நேரம் ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவார்.

துரைமுருகன் இல்லம்
பிறகு விடுதிக்கு திரும்பும் முதல்வர் ஸ்டாலின் இரவு வேலூரிலேயே தங்குகிறார். அதன் பிறகு நாளை காலை 10.30 மணிக்கு மீண்டும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் 12 மணி வரை ஆய்வு மேற்கொள்கிறார்.அந்த ஆய்வு முடிந்ததும் காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் இல்லத்துக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு மதிய உணவு சாப்பிடுகிறார்.

சென்னை ரிடர்ன்
அதன் பிறகு தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் முதல்வர் ஸ்டாலின், நாளை மாலை 6.30 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து தன்பத் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை திரும்புகிறார். இதனிடையே முதல்வரின் பயண ரூட் முதலில் சாலை மார்க்கமாக திட்டமிடப்பட்டு பிறகு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் ரயில் பயணமாக மாற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications