என் மகன் கதிர் ஆனந்தை லாரி ஏற்றி கொல்லவும் சதி நடந்தது.. துரைமுருகன் பகீர் தகவல்
Recommended Video
ஆம்பூர்: வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலில் போட்டியிடும் தனது மகன் கதிர் ஆனந்தின் வேட்பு மனுவை நிராகரிக்க செய்ய, சிலர் சதி செய்து வருகின்றனர் என திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ள வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலை முன்னிட்டு, ஆம்பூரில் திமுக தேர்தல் அலுவலகத்தை துரைமுருகன் திறந்து வைத்தார். தொடர்ந்து திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அரக்கோணம் தொகுதி எம்.பி ஜெகத்ரட்சகன், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன், கடந்த முறை வேலூர் தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, எனது வீட்டில் வருமான வரி சோதனை நடத்த யார் உத்தரவிட்டார்களோ அவர்கள் தான் தொடர்ந்து சதி வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.
மேலும் என் வீட்டுத் தோட்டத்தில் பணத்தை பதுக்கி வைத்தவர்கள் யாரென்பதும் எனக்கு தெரியும். அதே போல என் வீட்டில் சோதனை செய்வதற்காக ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமித்தது யார், என் மகனை லாரி ஏற்றி கொலை செய்ய சொன்னது யார் என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி கண்ணீர் மல்க பேசினார் துரைமுருகன்.
இத்தனை சதிகளுக்கும் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். துரோகத்தை மட்டுமே செய்யும் சிலரால் இந்த சதி வேலைகள் நடத்தப்பட்டு வருகின்றன என சாடினார் துரைமுருகன்.
எனது உயிர் போகும் வரை நான் திமுக கட்சியில் தான் இருப்பேன் என மிக உணர்ச்சிகரமாக பேசினார். மேலும் என் உதிரத்தில் தோன்றிய என் மகனும் கடைசி வரை திமுக-வில் தான் இருப்பான், கட்சிக்காகவே உழைப்பான் என கூறி பேச்சை நிறைவு செய்தார்.












Click it and Unblock the Notifications