வேலூர் அருகே பதற்றம்! காவல் நிலையம் முன் தீக்குளித்து இறந்த தலித் இளைஞர்... எஸ்.ஐ. பணியிடை நீக்கம்
வேலூர்: மேல்பாடி காவல் நிலையம் அருகே தலித் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் உதவி ஆய்வாளர் கார்த்தியை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
திருவலம் அருகே உள்ள குகையநல்லூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சரத். அறுவடை இயந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். தலித் சமுதாயத்தை சேர்ந்த இவர் வேறு சாதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில், பெண்ணுடன் வீட்டை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சரத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், மேல்பாடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் கார்த்தி, தன்னை அடிக்கடி மிரட்டுவதாக கூறி கடந்த 11ஆம் தேதி மேல்பாடி காவல் நிலையம் அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதில் படுகாயமடைந்த அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மேல்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் சரத்தின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணிநீக்கம் செய்ய கோரிக்கை
சரத்தை காவல் உதவி ஆய்வாளர் கார்த்தி சாதி ரீதியாக துன்புறுத்தியதாலேயே அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். உதவி ஆய்வாளர் கார்த்தியையும் மற்ற போலீசாரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று திருவலம் - பொன்னை சாலையில் குகைய நல்லூர் அருகே அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் மேல்பாடி காவல் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர் எஸ்.பி. பேச்சுவார்த்தை
இதனையடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தீக்குளிப்புக்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

எஸ்.ஐ. பணியிடை நீக்கம்
இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மேல்பாடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் கார்த்தியை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக காவல் டிஐஜி ஆனி விஜயா உத்தரவிட்டுள்ளார். சரத் குடும்பத்தினர் மீது காதல் விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை உதவி ஆய்வாளர் கார்த்தி சரியான முறையில் விசாரிக்கவில்லை என்றும் அதன் காரணமாகவே சரத் காவல் நிலையம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications