காதலை கூற தனியாகப் போவது போல்; ஓட்டுக்கேட்க வேட்பாளர்கள் தனியாக செல்ல வேண்டும்! துரைமுருகன் அட்வைஸ்!
வேலூர்: காதலைச் சொல்ல தனியாகச் செல்வது போல், ஓட்டுக்கேட்க வேட்பாளர்கள் தனித்தனியாக செல்ல வேண்டும் என திமுகவினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவுரை கூறியிருக்கிறார்.
மேலும், வேட்பாளர்கள் தன்னுடன் ஒரு பெரிய படையையே அழைத்துக் கொண்டு கூட்டமாக சென்றால் தலையை ஆட்டுவார்களே தவிர ஒருவரும் ஓட்டு போடமாட்டார்கள் என எச்சரிக்கையும் விடுத்தார் அவர்.
தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் திட்டத்தான் செய்வார்கள்! பிறகு மாலையா சூடுவார்கள்! TR பாலு ஓபன் டாக்!
வாக்காளர்களுக்கு மிரட்சியை ஏற்படுத்தாதவாறு வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
திமுக பொதுச்செயலாளர்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். தமது வயதையும் ஒரு பொருட்டாக கருதாமல் நேரடியாக சென்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து காட்பாடி, வாணியம்பாடி என மூன்று மாவட்டங்களுக்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கலகல பிரச்சாரம் செய்கிறார். துரைமுருகன் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் நகைச்சுவைக்கு பஞ்சமே இருப்பதில்லை.
நையாண்டி பேச்சு
அந்தளவுக்கு அவரது பேச்சில் நையாண்டிகளும், கேலி கிண்டல்களும் இடம்பெற்றிருக்கும். இதனிடையே இன்று திமுக வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் மாவட்டத்தில் பரப்புரை செய்த அவர் வேட்பாளர்களுக்கும், திமுகவினருக்கும் முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கினார். அதாவது வாக்காளர்களிடம் ஓட்டுக் கேட்க செல்லும் போது கூட்டமாக செல்ல வேண்டாம் என்றும் காதலை சொல்ல தனியாக போவது போல் ஓட்டுக்கேட்கவும் வேட்பாளர்கள் தனியாக செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
கூட்டமாக செல்லாதீர்
வேட்பாளர்களும், திமுகவினரும் கும்பலாக ஓட்டுக் கேட்டுச் செல்லும் போது எல்லோரும் ஓட்டுப்போடுகிறார்களோ இல்லையோ தலையை வேகமாக ஆட்டிவிட்டு, நீங்கள் சென்ற பிறகு அந்த நோட்டீஸை தூக்கி வீசிவிடுவார்கள் என்ற அரசியல் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். வாக்காளர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களின் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிய வேண்டுமானால் கூட்டமாக செல்வதை தவிர்த்து தனியாக செல்லுங்கள் என பாடம் எடுத்தார்.
புதிய கலாச்சாரம்
அண்மைக்காலமாக தனியாக சென்று ஓட்டுக்கேட்பதை கவுரவக் குறைச்சலாக கருதும் வேட்பாளர்கள், தாரை தப்பட்டைகளுடன் ஆட்களை திரட்டி ஊர்வலமாக சென்று ஓட்டுக்கேட்கும் புதிய கலாச்சாரத்தை கடை பிடிக்கத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் துரைமுருகனின் இந்த அறிவுரை சிரிப்பை ஏற்படுத்தினாலும் அது சிந்திக்க வேண்டிய ஒன்றும் ஆகும்.