துரைமுருகன் வீட்டிற்கு ரெய்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளை சோதனை செய்த திமுகவினர்
வேலூர்: திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மகன் கதிர் ஆனந்த் எம்பி வீட்டில் சோதனை நடத்த இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்திருந்தனர். ஆனால் துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டில் இல்லாததால் 7 மணி நேரமாக சோதனை செய்யமுடியாமல் காத்திருந்தனர். பின்னர் கதிர் ஆனந்த் வீட்டில் சோதனை செய்ய அனுமதி அளித்த நிலையில், சோதனை நடத்த சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகளை திமுகவினர் சோதனை செய்து உள்ளே அனுப்பினர்.
திமுக பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமாக இருப்பவர் துரைமுருகன். இவரது மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதி திமுக எம்பியாக உள்ளார். இன்று காலை துரைமுருகனின் வலது கரம் என்று சொல்லப்படும் பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை செய்தி திமுகவினர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சிறிது நேரத்தில் வேலூர் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டிற்கு காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கும் சோதனை நடத்த சென்றனர். துரைமுருகன் சென்னையில் உள்ள நிலையில், அவரது மகன் கதிர் ஆனந்த் வெளிநாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், சோதனை நடத்த வந்த அதிகாரிகள் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலை இருந்தது.
துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக செய்தி வெளியான நிலையில், திமுகவினர் அங்கு குவிந்தனர். துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் இருவருமே வீட்டில் இல்லாததால், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தொடங்குவது தாமதம் ஆனது. வெளிநாட்டில் உள்ள கதிர் ஆனந்தை தொடர்பு கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் பேசினர்.

இதையடுத்து இமெயில் வாயிலாக சோதனை நடத்த ஒப்புதல் தெரிவித்து கதிர் ஆனந்த் மின்னஞ்சல் அனுப்பியதாக சொல்லப்படுகிறது. இந்த மின்னஞ்சலில் எம்பி தரப்பில் யார் யார் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். எம்பி தரப்பில் இருந்து காட்பாடி வடக்குப்பகுதி செயலாளர் சுனில் குமார் உள்ளிட்டோரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நடைமுறைகள் காரணமாக சோதனை தொடங்குவதற்கு கால தாமதம் ஆனது.
பின்னர் சுமார் 7 மணி நேர தாமதத்திற்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தொடங்கியுள்ளனர். சோதனை தொடங்க சென்ற அதிகாரிகளிடம் ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா என திமுகவினர் சோதனை செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகளின் பர்ஸ் உள்ளிட்டவற்றை திமுகவினர் சோதனை செய்த பிறகே உள்ளே அனுப்பினர்.

பெண் அதிகாரிகள் வைத்திருந்த ஹேண்ட்பேக்குகள், லேப்டாப்கள் ஆகியவற்றையும் திமுகவினர் சோதனை செய்து பார்த்தனர். காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகம், பூஞ்சோலை சீனிவாசன் அவரது உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications