திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு அமலாக்கத்துறை சம்மன்.. விடாமல் துரத்தும் 2019 பணப்பட்டுவாடா வழக்கு!
வேலூர்: அமைச்சர் துரைமுருகனின் மகனும் வேலூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பியுமான கதிர் ஆனந்த்-க்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ரெய்டில் ரூ.10 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியிலிருந்து கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் நடத்தினர். இதில் ரூ.10 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து வெவ்வேறு இடங்களில் நடந்த ரெய்டில் மொத்தம் ரூ.10.57 கோடி வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்தும் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

எனவே தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது. இதில் கதிர் ஆனந்த் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று கதிர் ஆனந்த் ஆஜராகினார். இவருடன் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் என இவரது ஆதரவாளர்களும் ஆஜராகினர். இவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 125(ஏ), இந்திய தண்டனைச் சட்டம் 171(இ), 171 பி(2) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அமலாக்கத்துறையும் சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. ஆனால் சம்மன் இதுவரை கிடைக்கவில்லை என்று கதிர் ஆனந்த் தரப்பில் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications