குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு
Recommended Video
குடியாத்தம்: குடியாத்தம் ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு மை பூசி அழித்த திமுகவினர் 22 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு எழுந்தது.
இந்தி தினத்தையொட்டி கடந்த இரு நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் இந்தியா பல மொழி பேசும் நாடாகும். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு மகத்துவம் உண்டு.

ஆனால் நாடு முழுவதும் ஒரே மொழி பேசும்போது, சர்வதேச அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும். அதுமட்டுமில்லாமல், அதிக மக்களால் பேசப்படும் மொழியாகவும் ஹிந்தி மாறும் என தெரிவித்துள்ளார்.

அமித்ஷாவின் இந்தக் கருத்துக்கு தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்பு கருத்தை கண்டித்து 20-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்துக்கு திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த சிலர் வந்தனர். அவர்கள் ரயில் நிலையத்தில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களை கருப்பு மை கொண்டு பூசி அழித்தனர்.

தொடர்ந்து திணிக்காதே.. திணிக்காதே.. இந்தியை திணிக்காதே என கோஷங்களுடன் பதாகைகளை ஏந்தி மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் 22 பேரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications