95 வயதில் காட்பாடி மஜீத் மரணம்! பழசை மறக்காத துரைமுருகன்! நேரில் சென்று கண் கலங்கியபடி அஞ்சலி!
வேலூர்: பழம்பெரும் திமுககாரரும், அக்கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலாளருமான காட்பாடி மஜீத் மறைவு செய்தியறிந்து நேரில் சென்று கண்கலங்கிய படி அஞ்சலி செலுத்தியுள்ளார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.
அமைச்சர் துரைமுருகனை பொறுத்தவரை அவ்வளவு எளிதாக யாருக்காகவும் உருக மாட்டார். ஆனால் அப்படிப்பட்ட மனிதரே காட்பாடி மஜீத் உலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற போது பழைய நினைவலைகளில் மூழ்கி கண் கலங்கிவிட்டார்.

துரைமுருகன் கல்லூரி மாணவராக இருந்த காலம் தொட்டு அவரை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி ஆரம்பக்காலத்தில் கட்சியில் வளர்த்துவிட்டவர் மஜீத். திமுகவில் துரைமுருகனின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் கண்டு தனது மகனே மந்திரியாகி விட்டதை போல் தொடக்கக்காலத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர் மஜீத்.
ஆரம்பக்காலங்களில் ஒன்றியச் செயலாளர் என்ற முறையில் துரைமுருகனுக்காக காட்பாடி தொகுதியில் தேர்தல் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார் மஜீத். கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த மஜீத் நேற்றிரவு காட்பாடியில் உள்ள அவரது இல்லத்தில் காலமாகிவிட்டார். இது குறித்து தகவலறிந்த அமைச்சர் துரைமுருகன், தன்னுடைய திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியை ஒத்தி வைத்துவிட்டு முதல் வேலையாக இன்று காலை காட்பாடியில் உள்ள மஜீத் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றார்.

அப்போது விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதனும் அங்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார். இருவரும் பழசை மறக்காமல் மஜீத் குறித்த பழைய நினைவுகளை சோகத்தோடு பகிர்ந்துகொண்டனர். காட்பாடியில் துரைமுருகன் இன்று தொடர் வெற்றிகளை குவித்து வரும் நிலையில், ஆரம்பக்காலத்தில் அவரது வெற்றியை சாத்தியப்படுத்தியது மஜீத்தின் களப்பணி.
துரைமுருகனை போலவே அவரது மகனும், வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்தும், மஜீத் மறைவுக்கு இரங்கலும், குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications