பணம் தரும் வேட்பாளருக்கு 10 ஆண்டு தடை! சீமான் சொல்லும் குட் ஐடியாவை அமல்படுத்திதான் பார்க்கலாமே!
வேலூர்: தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் தரும் வேட்பாளருக்கு தேர்தல்களில் போட்டியிட 10 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு உருவாகி வருகிறது.
ஜனநாயகத் திருவிழா என கொண்டாடப்படுகிறவைதான் தேர்தல்கள். ஆனால் தேர்தல் திருவிழாக்களில் நேர்மை, பிரசாரம், மக்கள் சிந்திக்கும் திறன் என்பதெல்லாம் 'கொட்டும் பணமழை'யால் அடித்து துவம்சம் செய்யப்பட்டு விடுகிறது. ஓட்டுக்கு கொடுக்கும் பணம்தான் வேட்பாளர்களின் வெற்றியை தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்திருப்பது ஜனநாயகத்துக்கு அவலமானதுதான்.

இந்திய ஜனநாயகத்தில் குறிப்பாக தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் 70 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. சீர்திருத்தங்கள் பொதுவாக தொடக்கங்களில் கடினமானதாக இருந்தாலும் ஏற்கப்பட்டுவிட்டால் இயல்பான ஒன்றாகிவிடும். வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட தடை என்பது நடைமுறைக்கு வரும் போது அத்தனை பேரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இப்போதைக்கு இருக்கிறது.
இந்த வரிசைகளில்தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்வைக்கும் கோரிக்கையும் ஒன்று. அதாவது தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள், தேர்தல்களில் போட்டியிட 10 ஆண்டுகள் தடை விதித்துவிட்டால் எந்த தேர்தலிலு பணநாயகம் என்பது இருக்காது என்கிறார் சீமான். பணப் புழக்கம், பணப்பட்டுவாடா என்பதெல்லாம் தேர்தல் காலங்களில் சகஜமாகிவிட்டது. தேர்தல் அதிகாரிகளே நாளொன்றுக்கு இத்தனை கோடி ரூபாய் பிடிபட்டதாக அறிவிக்கின்றனர். பணப் பட்டுவாடா அதிகரித்த காரணத்தாலேயே ஆர்கே நகர், வேலூர் தொகுதிகளுக்கு தேர்தல்கள் நிறுத்தப்பட்ட சரித்திரத்தையும் நாம் பார்த்திருக்கிறோம்.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு பணநாயகம் அருவெறுப்பானதாகவே இருந்து வருகிறது. பணபலத்தை சாமானியர்களால் முறியடிக்கவே முடியாத நிலைமைதான் இருக்கிறது. நிச்சயமாக ஜனநாயகத்தின் திருவிழாவாக கொண்டாடப்படும் தேர்தலை இந்த பணநாயகம் அர்த்தமற்றதாக்கிக் கொண்டுதான் இருக்கிறது.
இத்தகைய பேரவலத்துக்கு முடிவுகட்ட, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோருவதைப் போல பணம் கொடுக்கும் வேட்பாளருக்கு 10 ஆண்டுகள் தடை விதித்துதான் பார்ப்போமே.. அப்பவாது பணமுதலைகளின் வாக்கு வேட்டை ஓயுமா? என்கிற குரல்கள் சமூக வலைதளங்களில் அதிவேகமாக எதிரொலிக்கிறது.












Click it and Unblock the Notifications