அரண்ட வேலூர்.. தாய்மாமன் மடியில் ஏறி உட்கார்ந்து.. வாயை பிளந்து பார்த்த ஊர்ஜனம்.. மிரண்ட அணைக்கட்டு
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு விசேஷம், தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.. அப்படி என்ன நடந்தது வேலூரில்?
திருமண நிகழ்வு என்பது, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்வு என்பதால்தான், ஏழ்மையில் உள்ளவர்களும் கடன்வாங்கியாவது கல்யாணத்தை செய்வார்கள்.

அமர்க்களம்: வசதியில்லாதவர்களே இப்படி என்றால், வசதி படைத்தவர்களின் ஆடம்பரத்தை சொல்லவே தேவையில்லை.. வகைவகையான ஆடம்பரங்கள், தினுசுதினுசான நகைகள், பகட்டான சீர்வரிசைகள் என கண்களை பறித்துவிடும்.. இதில் பெரிதும் ஆச்சரியங்களை கிளப்புவது சீர் வரிசைகள்தான்..
இன்னமும்கூட நம்முடைய பாரம்பரியத்தை பறைசாற்றும்வகையில், மாட்டு வண்டிகளில் சீர்வரிசை ஊர்வலம், ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட கால்நடைகளை மணமேடையில் பரிசளிப்பது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.. திருமணம், காதுகுத்து, என்றாலே "தாய்மாமன் சீர்" தான் விசேஷமாக கவனிக்கப்படும். சில நாட்களுக்கு முன்பு, வந்தவாசியில் 3 பெண் குழந்தைகளுக்கு நடந்த காதுகுத்து விழாவில், அவர்களின் தாய்மாமன் ஏகப்பட்ட சீர்களை செய்து அசரடித்துவிட்டார்.
பட்டாசுகள்: சுமார் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு கிரேன் மாலை சென்றது.. இதைத்தவிர, மேளதாளங்களும், பட்டாசுகளும் சுற்றுவட்டார பகுதிகளில் எதிரொலித்தவாறே இருந்தது.. டிராக்டர் டிரெய்லரில் 3 பெண் குழந்தைகளையும் உட்கார வைத்து, 100-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான சீர்வரிசைகள் கொண்டு ஊர்வலமாக சென்றார் தாய்மாமன்.. டூவீலரில் சென்றவர்கள், பைக்கை நிறுத்திவிட்டு, அந்த கிரேன் மாலையை பார்த்து வியந்தனர்..
சபாஷ் பெரியவர்: இப்போது இதையும் வேலூர் காதுகுத்து சம்பவம் முறியடித்துவிட்டது.. வழக்கமாக குழந்தைகளுக்கு காதணி விழா நடக்குமே தவிர, பெரியவர்களுக்கு நடக்காது.. இப்படித்தான் ஒரு படத்தில் சூரி, தனக்கு வாலிப வயதில் காதுகுத்து நடத்தி பணத்தை வசூல் செய்வார்.. ஆனால், அதையும் இந்த வேலூர் சம்பவம் ஓவர்டேக் செய்துவிட்டது. இந்த காதுகுத்து குழந்தைக்கு வயது 60 என்பதுதான் ஹைலைட்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மருதுவல்லிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது ஏரிக்கோடி என்ற கிராமம். இங்கு வசித்து வருபவர் முனிவேல்.. 60 வயதாகிறது.. இவர் ஒரு கூலித்தொழிலாளி. கல்யாணமாகி மனைவி, 2 மகன்கள் இருக்கிறார்கள். முனிவேலுடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 பேர்.. மிகவும் ஏழ்மையான குடும்பம். அதனால், இவர் சின்ன வயசாக இருக்கும்போது, காது குத்தவில்லை. இவரது தம்பி ராஜா என்பவருக்கும் காது குத்தவில்லை.
மற்றவர்களுக்கு திருப்பதியில், மொட்டை அடித்து அழைத்து சென்று காது குத்தியிருக்கிறார்கள். அதனால், முனிவேலை அவரது நண்பர்கள் "காது குத்தாதவன்" என்று அடிக்கடி கிண்டல் செய்துவந்தார்களாம். அதனால்தான், இப்போது காதுகுத்த முடிவு செய்துள்ளனர்.
தாய்மாமன்: சொந்த கிராமத்திலேயே குலதெய்வம் கோயிலில் பொங்கல் வைத்து கிடா வெட்டி பூஜை செய்துள்ளனர். பிறகு, முனிவேல் மற்றும் ராஜா ஆகியோருக்கு காதுகுத்து விழா நடத்தப்பட்டுள்ளது.
60 வயது முனிவேலுக்கு, அவரது 90 வயது தாய்மாமன் தங்கவேலுவின் மடியில், உட்கார வைத்து காது குத்தியிருக்கிறார்கள். இந்த விழாவில், 50-க்கும் மேற்பட்ட வகை வகையான சீர்வரிசை தட்டுகளை வைக்கப்பட்டுள்ளன. பம்பை வாத்தியம், மேளதாளங்கள் சீர்வரிசையுடன் ஊர்வலம் நடத்தப்பட்டது.
மொய் விருந்து: மிகப்பெரிய விழாவாக நடந்ததால், விழாவில் ஆட்டுக்கறி விருந்து பரிமாறப்பட்டுள்ளது.. பெரிய குடும்பம் என்பதால், உறவினர்களே ஏகப்பட்ட பேர் வந்திருந்தனர்.. அனைவருமே போட்டி போட்டு மொய் எழுதினார்களாம்.. ஊர்வலமாக சென்றதை கிராம மக்கள் அதிசயமாக வேடிக்கை பார்த்தனர். உறவினர்கள் அனைவருமே திரண்டுவந்ததால், ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டமாக விழா நடந்தது.. இதை அந்த பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.












Click it and Unblock the Notifications