திருப்பத்தூர் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு குட்நியூஸ்.. கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு
திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 10, 12-ம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும், 100 சதவீதம் உயர்கல்வியில் சேர்ப்பதை இலக்காகக் கொண்டு கலெக்டர் அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையின் மூலம் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. போன்ற படிப்பை எவ்வாறு படிப்பது, விண்ணப்பிப்பது, என்னென்ன உதவிகள், சலுகைகள் அவற்றை எப்படி பெறுவது என்பது குறித்து அறியலாம் என கலெக்டர் சிவசவுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருப்பத்தூர் கலெக்டர் சிவசவுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 10, 12-ம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும், 100 சதவீதம் உயர்கல்வியில் சேர்ப்பதை இலக்காகக் கொண்டு கலெக்டர் அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறையின் மூலம் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. போன்ற படிப்பை எவ்வாறு படிப்பது, விண்ணப்பிப்பது, என்னென்ன உதவிகள், சலுகைகள் அவற்றை எப்படி பெறுவது என்பது குறித்தும், கல்லூரிகளில் உள்ள காலியிடங்கள் எத்தனை போன்ற சந்தேகங்களையும் மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் தொலைபேசி வழியாக கேட்டுப்பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறையில் மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டுவதற்கென பயிற்சி பெற்ற நிபுணர்கள் உள்ளனர். எனவே 04179-225223 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசலாம். மேலும் 97878 33608 என்ற வாட்ஸ் அப் எண்ணில் செய்தி அனுப்பி சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மேலும் மாணவர்களுக்கென்று பிரத்யேகமாக, ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 15 நாட்களுக்கு ஒரு முறை 2 மற்றும் 4-ம் வாரத்தில் வருகிற வியாழக்கிழமைகளில் மாணவர்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் நடக்கிறது.
இந்த கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், கல்வித்துறை, வருவாய்த்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள், உயர்கல்வி சேர்க்கைக்கான கல்லூரி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.
எனவே அனைத்து மாணவர்களும், மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணில் அழைத்து உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் மாணவர் குறைதீர்வு நாள் கூட்டங்களில் கலந்துகொண்டு பயனடையலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications