வேலூர்: 10 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய சதுப்பேரி.. ஊருக்குள் புகுந்த வெள்ளம்.. தத்தளிக்கும் மக்கள்
சதுப்பேரி வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டுள்ளனர்
வேலூர் : வேலூரில் சதுப்பேரி உபரி நீர் வெளியேற்றப்படும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஊருக்குள் நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஒருபக்கம் தென்மேற்கு பருவ மழை, இன்னொரு பக்கம் வடகிழக்கு பருவமழை என மாறி மாறி கொட்டி கொண்டிருக்கிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது..
அந்த வகையில், வேலூர் மாவட்டத்திலும் நல்ல மழை பொழிவு இருக்கிறது.. முக்கிய நீர்நிலைகள் நிரம்பி கொண்டிருக்கின்றன. அதில் குறிப்பிடத்தகுந்தது சதுப்பேரி ஆகும்.

நிரம்பியது
சுற்றுவட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு சதுப்பேரிதான் நீராதாரம்.. 621 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது இந்த ஏரி.. அதிக அளவு மழை காரணமாக, சதுப்பேரி கடந்த 2 நாட்களுக்கு முன்பே நிரம்பிவிட்டது.. அதாவது கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு சதுப்பேரி நிரம்பி வழிகிறது. இதனால் சதுப்பேரியை ஒட்டியுள்ள சதுப்பேரி கிராமத்தில் நீர் புகுந்துள்ளது..

சதுப்பேரி
ஏரியை ஒட்டியே வீடுகளை இங்கு கட்டி உள்ளனர்.. சதுப்பேரி 200 ஏக்கர் பரப்பளவுக்கும் மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.. இந்நிலையில், இந்த ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் கால்வாய் பகுதிகள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் நீர் வெளியே செல்ல முடியவில்லை.. எனவே, அருகில் இருக்கும் கொணவட்டம் நேதாஜி தெருவில் வெள்ள நீர் புகுந்துவிட்டது.. இங்குள்ள குடியிருப்புவாசிகள் இதனால் அவதிக்குள்ளாகி உள்ளனர்...

வேண்டுகோள்
வீட்டை விட்டு அவர்களால் வெளியே வர முடியவில்லை.. மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி அதிகாரிகளும் இவர்களுக்கு எந்த மீட்பு நடவடிக்கையும் எடுக்காமல் உணவு கூட வழங்காமல் அலைகழித்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட மக்களை, உடனடியாக மீட்டு திருமண மண்டபங்களிலோ அல்லது பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு, உணவு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

நடவடிக்கை
அதேபோல, 20 கிராம மக்களின் நிலத்தடி நீராதாரமாக விளங்கும் சதுப்பேரியின் நீர்வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இங்கிருந்த இணைப்புக்கால்வாய்கள் காணாமல் போயுள்ள நிலையில், அதை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications