அமித்ஷாவுக்கே தமிழ்நாட்டில் இந்த நிலையா? காலியான சேர்கள்.. பேசும்போதே எழுந்து சென்ற வேலூர் மக்கள்
வேலூர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிக் கொண்டு இருக்கும்போதே ஏராளமான மக்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றதால் வேலூர் பாஜக பொதுக்கூட்டத்தில் காலி நாற்காலிகள் ஏராளமாக காணப்பட்டன.
தமிழ்நாட்டுக்கு 2 நாள் பயணமாக வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்களை சந்தித்து பேசி இரவு விருந்து வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக இன்று காலை சென்னை கோவிலம்பாக்கத்துக்கு சென்ற அமித்ஷா திருமண மண்டபத்தில் தென்சென்னை மக்களவை தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது வரும் 2024 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அவர் விவாதித்து இருக்கிறார்.
அந்த கூட்டத்தில் பேசிய அவர், "தமிழ்நாட்டில் 25 இடங்களில் பாஜக வெற்றி பெற இலக்கு நிர்ணயிப்போம். அதற்கு தேவையான பணிகளில் நாம் தீவிரமாக ஈடுபடவேண்டும். பாஜக ஆட்சி தமிழ்நாட்டில் அமைய பாடுபடவேண்டும். பூத் கமிட்டிகளை பாஜக நிர்வாகிகள் வலுப்படுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.
அதை தொடர்ந்து சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக வேலூர் விமான நிலையம் சென்ற அவர், அங்கிருந்து மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் கந்தனேரிக்கு சென்றார். இந்தப் பொதுக்கூட்டத்தில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, "தமிழர்களின் சின்னமான செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்து பாஜக அரசு சாதனை படைத்து இருக்கிறது. உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் பெருமை உயர்ந்து உள்ளது. தமிழ்நாட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளை பெற்றுத்தர வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 3வது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி அமையும்.
எந்த மாநிலத்துக்கு சென்றாலும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியை பேச மறந்து உள்ளாரா? பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியின் தொன்மைக்கு சிறப்பு செய்தவர். காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தை நடத்தி சிறப்பு சேர்த்தவர் பிரதமர் நரேந்திர மோடி.
23 மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்த்து அனைத்து மாநில மக்களும் படிக்க வழி செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. தமிழ்நாட்டுக்கு 9 ஆண்டு கால ஆட்சியில் 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி பிரதமர் நரேந்திர மோடி கொடுத்து இருக்கிறார்." என்றார். இந்த நிலையில் அமித்ஷா ஆவேசமாக பேச்சிக்கொண்டு இருந்தபோதே மக்கள் கூட்டம் கலைந்து செல்ல தொடங்கியது.
தொடக்கத்தில் ஓரிருவராக கலைந்து சென்ற நிலையில் ஒரு கட்டத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக எழுந்து சென்றனர். இதன் காரணமாக அமித்ஷா பேசிக்கொண்டு இருந்தபோதே வேலூர் பொதுக்கூட்ட அரங்கில் காலி சேர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. முன்னதாக அமித்ஷா வருகையை வரவேற்று வேலூரில் பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் வைக்கப்பட்டு இருந்த பேனர் சரிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications