நான் ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறினால் நெருப்பில் குதித்து சாவேன்.. துரைமுருகன் ஆவேசம்
வேலூர்: இந்த 50 வருடத்தில் நான் யாரிடமும் லஞ்சம் வாங்கியது கிடையாது.. நான் ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கினேன் எனக் கூறினால் இங்கேயே நெருப்பில் குதித்து சாவேன்.. நான் ஒரு பெண்ணிடம் தப்பாக நடந்து கொண்டேன் என்று யாராவது கூறினால் நான் தூக்கு போட்டு செத்துப் போவேன்.. ஒழுக்கம் வேண்டும்.. மக்களுக்கு பயந்து தொண்டு செய்ய வேண்டும்.. என்று வேலூர் மாவட்டம் காட்பாடி கிளித்தான் பட்டறையில் பரப்புரையின் போது துரைமுருகன் பேசினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், திமுக கழக பொதுச் செயலாளருமான துரைமுருகன் இன்று கிளித்தான்பட்டறை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது சிலம்பம், சிலம்பம் சண்டை சுருள்வால் சுற்றுதல் கத்தி சண்டை, பல்வேறு விதமான பொம்மை நடனங்கள் , மற்றும் மேளதாளங்கள் முழங்க பொதுமக்கள் துரைமுருகனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்

அப்போது துரைமுருகன் பேசுகையில், "நான் இந்த பதவியில் இருந்த காலகட்டத்தில் ஒரு 40, 50 வருஷத்துல நான் யாரிடத்திலாவது ஒரே ஒரு ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கினேன்னு காட்டச் சொல்லுங்க பாப்போம். நான் இங்கேயே நெருப்புல குதிச்சு சாவறேன். ஒரு ரூபாய் நான் வாங்குனது கிடையாது..
அதே மாதிரி, அவன் ஒரு பொண்ணோட அசிங்கமா.. ஒரு தப்பா நடந்துகிட்டான்னு யாராவது சொன்னா, நான் தூக்கு போட்டு செத்துப்போவேன்.ஆகையினால ஒழுக்கம் வேண்டும் ஒழுக்கம் இருக்கணும், மக்களுக்குப் பயந்து தொண்டு செய்யணும். இந்த இரண்டையும் செய்யறப்பதான் மக்கள் நம்மை வாழ்த்துவாங்க.. இல்லன்னா லோலாய்னுருவாங்க.. ஆகையினால் இத்தனையும் செய்திருக்கிற எனக்கு, இந்த முறையும் நீங்கள் தவறாமல் உதயசூரியன் வாக்களிக்க வேண்டும் என்று பரப்புரையில் துரைமுருகன் கூறினார்.
முன்னதாக துரைமுருகன் இரண்டு நாள் முன்பு பரப்புரையில் பேசும் போது, "தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும். அவ்வாறு ஆட்சி அமைந்தவுடன் தற்போது வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும். காட்பாடி பகுதியில் 37,000 பேர் மகளிர் உரிமை தொகை பெறுகின்றனர். மகளிருக்கான உதவித்தொகையை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். குடும்பத்துக்கு தேவையான பொருள்கள் வாங்கிக் கொள்ள ரூ.8 ஆயிரம் மதிப்பு கூப்பன் வழங்கப்படும். தற்போது காஸ் தட்டுப்பாடு உள்ள நிலையில், இந்த கூப்பனை கொண்டு மின்சாதன அடுப்பு வாங்கலாம். திருவள்ளுவர் நகரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பணி முடிந்துவிட்டது. தேர்தல் முடிந்தவுடன் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications