1.5 கோடி கடன் வாங்கிவிட்டு டிமிக்கி தந்த தொழிலதிபர்! கடை வாசலில் தர்ணா செய்த இந்தியன் வங்கி மேலாளர்!
வேலூர்: திருப்பத்தூர் அருகே இந்தியன் வங்கியில் 1.5 கோடி கடன் வாங்கிவிட்டு அசலையும், வட்டியையும் திருப்பிச் செலுத்தாத தொழிலதிபரின் ஹார்டுவேர் கடை முன்பாக வங்கி மேலாளர் ஒரு நாள் முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வங்கி தரப்பில் பல முறை அறிவுறுத்தியும் கடன் தவணைத் தொகையை திருப்பிச் செலுத்தாததால் வங்கி மேலாளர் இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

இந்தியன் வங்கி
வேலூர் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் விஷமங்கலம் கிராமத்தை சேர்ந்த அருணகிரி என்பவர் தனது ஹார்டுவேர் கடை விரிவாக்கத்திற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.5 கோடி கடன் பெற்றிருக்கிறார். இதையடுத்து மாதந்தோறும் செலுத்த வேண்டிய கடன் தவணைத் தொகையை அருணகிரி செலுத்தாததால் இது குறித்து வங்கி சார்பில் நோட்டீஸ்களும், எச்சரிக்கை கடிதங்களும் பல முறை அனுப்பப்பட்டிருக்கின்றன.

ஹார்டுவேர் கடை
ஆனாலும் எதற்கு அசராத அருணாகிரி வங்கிபக்கமே தலைகாட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அசலும் வட்டியும் சேர்ந்து ரூ.1.75 கோடி நிலுவைத் தொகை இருந்ததால் அதை உடனடியாக கட்டக் கோரி அருணகிரி நடத்தி வரும் ஹார்டுவேர் கடைக்கு சென்ற இந்தியன் வங்கி மேலாளர் ஹேமன் குமார், யாரும் எதிர்பார்க்காத வகையில் தர்ணாவில் ஈடுபட்டார்.

வங்கி மேலாளர் தர்ணா
வங்கி மேலாளர் ஒருவர் கடன் தொகையை கட்டக்கோரி கடை வாசல் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல்துறையினர் வங்கி மேலாளர் ஹேமன் குமாரிடம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர் தனது தர்ணா போராட்டத்தை முடித்துக் கொண்டார். இதனிடையே வட்டி, அசல் என மொத்தமாக ரூ.1.75 கோடியை கட்டத் தவறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஹார்டுவேர் கடை அதிபர் அருணகிரிக்கு இந்தியன் வங்கி தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நூதன போராட்டம்
தமிழகத்தில் இதுவரை யாரும் நடத்திடாத வகையில் நூதன போராட்டத்தை நடத்தி கவனம் ஈர்த்திருக்கிறார் திருப்பத்தூர் கிளை இந்தியன் வங்கி மேலாளர் ஹேமன் குமார்.












Click it and Unblock the Notifications