திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா? என்ன துரைமுருகன் இப்படி சொல்லிட்டாரே! அப்போ விசிக?
வேலூர்: திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா என்ற கேள்விக்கு அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் அளித்த விளக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பல்வேறு கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.
வேலூர் புதிய பஸ்நிலையத்தில் புதிய விரிவான மினி பஸ் திட்ட தொடக்க விழா இன்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவரிடம்"திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு துரைமுருன், "தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. இப்போதே எதற்காக அவசரம்?" என அவருக்கே உரிய ஸ்டைலில் பதில் அளித்தார்.
நந்தன் கால்வாய்
இந்த விழாவில் அவர் மேலும் பேசுகையில், "நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ 100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். எந்த காலத்திலும் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அதுவும் வளர்ந்து வரும் சமுதாயத்தில் குற்றங்கள் நிகழும்.
முதல்வர் ஸ்டாலின்
ஆனால் அந்த குற்றத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் முக்கியம். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மினி பஸ் திட்டத்தால் ஆட்டோ டிரைவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மாற்று திட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக ஆட்சி
திமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கி உள்ளதாக குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில்தான் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது. இவ்வாறு துரைமுருகன் கடுமையாக விமர்சித்திருந்தார்.
பாமகவில் மோதல்
பாமகவில் தற்போது தந்தை- மகனுக்கிடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. தலைவர் பதவி யாருக்கு என்பதில்தான் அவர்களுக்கு மனகசப்பு ஏற்பட்டுள்ளது. அன்புமணிக்கு பாஜகவுடன் கூட்டணி செல்ல விருப்பம் தெரிவிப்பதாக தெரிகிறது. அதே வேளையில் கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஒரு இடங்களில் கூட பாமக வெல்லவில்லை என்ற ஆதங்கம் ராமதாஸிடம் இருக்கிறது.
பாஜக கூட்டணி
இதனால் அவர் பாஜக கூட்டணிக்குச் செல்ல கூடாது என கருதுகிறார். இதனால் அன்புமணியிடம் இருந்து தலைவர் பதவியையும் பறித்துவிட்டார். தற்போது இருவருக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்றைய தினம் திருவள்ளூரில் நடந்த பாமக பொதுக் குழு கூட்டத்தில் ராமதாஸிடம், அன்புமணி பகிரங்க மன்னிப்பு கேட்டார். ஒரு மகனாக ,கட்சியின் தலைவராக தான் என்ன செய்ய வேண்டும் என ஐயா ராமதாஸ் விரும்புகிறாரோ அதன்படி செயலாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தைலாபுரத்தில் ராமதாஸ்
தைலாபுரத்தில் ராமதாஸ் செய்தியாளர்களை சந்திக்கும் போதெல்லாம் செய்தியாளர்கள் கூட்டணி குறித்து கேட்டால், விரைவில் அமையும் என்கிறார். ஒரு வேளை திமுக கூட்டணியில் இணைய பாமக விரும்புகிறதா என தெரியவில்லை.
விசிக
ஆனால் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கிறது. பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என திருமாவளவன் திட்டவட்டமாக எப்போதோ தெரிவித்துள்ளார். எனவே திமுக கூட்டணியில் பாமகவை சேர்த்தால் விசிக வெளியே செல்லும் என சொல்லப்படுகிறது.
பாமக- விசிக
பாமகவுக்காக விசிகவை இழக்க முதல்வர் ஸ்டாலின் விரும்பமாட்டார் என்கிறார்கள். விசிக வெளியேறினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெளியேற வாய்ப்புள்ளது. காங்கிரஸும் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதால் பாமகவை ஸ்டாலின் ஏற்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications