பிரதமர் நடிக்க தொடங்கியதால் நான் நிறுத்திவிட்டேன்- மன்சூர் அலிகான் கிண்டல்
வேலூர்: பிரதமர் நரேந்திர மோடி நடிக்க தொடங்கிவிட்டதால் இனி இங்கு நமக்கென்ன வேலை என நினைத்து நான் நடிப்பதை நிறுத்துக் கொண்டேன் என நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் நேற்று தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகான் இவ்வாறு பேட்டி அளித்திருந்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: வரும் மக்களவைத் தேர்தலில் நான் வேலூரில் போட்டியிடுகிறேன். கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அதனால் என்ன போட்டியிட போகும் தொகுதி தெரிந்து விட்டது. அதனால் எனது தேர்தல் பணியை நான் தொடங்கிவிட்டேன்.
இந்த நாட்டை பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சி செய்து மக்களுக்கு என்ன செய்து விட்டார்கள். நாட்டையே விற்று குஜராத்தின் காலடியில் போட்டுவிட்டதுதான் மிச்சம். பிரதமர் மோடி சரியாக இந்த நாட்டை ஆட்சி செய்தால் நான் ஏன் தேர்தலில் போட்டியிட போகிறேன். இந்த வேலூரில் வந்து உங்களுக்கு கும்பிடு போட போகிறேன்?
அவரே எல்லாம்: பிரதமர் மோடியே ஹீரோ, வில்லன், பப்பூன் உள்ளிட்ட வேடங்களை போட்டுவிட்டார். அதனால்தான் நான் நடிப்பை நிறுத்திவிட்டு மக்களுக்கு பணியாற்ற வந்திருக்கிறேன். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் பெரிய நடிகர்தான். அவரது விஷ்வகுரு மோடியும் நடிகர்தான்.
10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சுவாசிக்கும் காற்றை தவிர மற்ற அனைத்திற்கும் வரிதான். விமான நிலையத்தையும் துறைமுகத்தையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டால் அவன் எதை எதையோ கொண்டு வருவான் . தமிழக மக்கள் பாஜகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள். இதனால் தமிழக மக்களை எப்போதும் போதையில் வைத்திருக்கத்தான் குஜராத்திலிருந்து போதையை சப்ளை செய்கிறது பாஜக. இவ்வாறு மன்சூர் அலிகான் பேசியிருந்தார்.
காமெடியன்: திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்தவர் மன்சூர் அலிகான். இவர் காமெடியிலும் கலக்கியவர். தமிழ் மண் மீது பற்றுக் கொண்ட மன்சூர் அலிகான், தமிழக மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற ஒரு கட்சியை தொடங்கியுள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முதலில் ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதாக கூறியிருந்த அவர் தற்போது தான் வேலூரில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதற்காக வேலூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். நாளை மறுநாள் முதல் தமிழகத்திற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
அதிமுக கூட்டணி: இந்த நிலையில் அவர் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவரது சொந்த கட்சியிலிருந்தே அவரது தலைவர் பதவி பறிக்கப்படுவதாக ஒரு அறிக்கை பொதுச் செயலாளர் கண்ணதாசன் பெயரில் வந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் மன்சூர் அலிகான் நீக்கம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
ரூ 70 ஆயிரம் லேப்டாப் திருட்டு: அதில் அவர் கூறியிருப்பதாவது: கண்ணதாசன் பொதுச் செயலாளரே இல்லை. அவர் ஆபிஸ் பாய், என்னுடன் எங்கு சென்றாலும் "அண்ணா அண்ணா" என அழைத்துக் கொண்டு வருவார். எனது அலுவலகத்தில் இருந்த ரப்பர் ஸ்டாம்புகள், 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப் திருடப்பட்டுள்ளது என பரபரப்பு புகாரை அளித்தார். மேலும் கண்ணதாசன் மீது கட்சியினர் யாரும் கோபம் கொள்ள வேண்டாம் என்றும் மன்சூர் அலிகான் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications