குருகுல கல்வியில் மாணவர்கள் அறிவு வளர்ந்து.. புதிய கல்விக் கொள்கை பற்றிய புரிதல் இல்லை.. ஆளுநர் ரவி!
வேலூர்: குருகுல கல்வியில் ஆசிரியர்கள், மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கலந்துரையாடினார்கள், புரிதல் இருந்ததாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள பழைய கல்வி முறையில் மாற்றம் கொண்டு வருவது தான் புதிய கல்விக் கொள்கை என்றும், புதிய கல்விக் கொள்கையை பற்றி பலருக்கும் விழிப்புணர்வும், புரிதலும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு அரசு இடையில் தொடர்ச்சியாக மோதல் போக்கு இருந்து வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மீண்டும் தேசிய கீதம் முதலில் ஒளிபரப்பவில்லை என்று ஆளுநர் உரையை படிக்காமலேயே புறப்பட்டார். இது கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகவே தொடர்கதையாகி வருகிறது.

அதேபோல் திராவிடம் தொடர்பாக ஆளுநர் பேசி வரும் கருத்துகள், புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பேசி வரும் கருத்துகள் தொடர்ந்து விவாதமாகி வருகிறது. ஆளுநரின் பேச்சிற்கு திமுக தரப்பில் பதில் அளிக்கப்பட்டு கொண்டே வருகிறது. இந்த நிலையில் மீண்டும் புதிய கல்விக் கொள்கை குறித்து துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருக்கிறார்.
வேலூரில் தென் மண்டல துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், பிரிட்டிஷ் இந்தியாவுக்கு வந்த பின்னர் நம்முடைய கல்வி கற்றல் முறையை மாற்றிவிட்டார்கள். அதனை நாம் தற்போது மீட்டெடுக்க வேண்டும். அன்றைய காலத்தில் அரசர்கள் கல்வியில் தலையிடவில்லை.
குருகுல கல்வியில் ஆசிரியர்கள், மாணவர்கள் இடையில் ஒருவருக்கு ஒருவர் கலந்துரையாடினார்கள். இதனால் மாணவர்கள் - ஆசிரியர்கள் இடையில் நல்ல புரிதல் இருந்தது. ஆசியர்களும், மாணவர்களும் தங்களின் அறிவையும் வளர்த்து கொண்டார்கள். இந்தியாவில் பிரதமர் மோடி கல்வியை பரவலாக்க விரும்புகிறார். மாநிலங்களில் கல்வி ஆரோக்கியமாக இல்லை.
பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி படிப்பு தரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்காக தான் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது. இந்தியாவில் உள்ள பழைய கல்வி முறையில் மாற்றம் கொண்டுஇ வருவது தான் புதிய கல்விக் கொள்கை. இந்த புதிய கல்விக் கொள்கையை பற்றி பலருக்கும் விழிப்புணர்வும், பெரிதாக புரிதலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications