ஜெயலலிதாதான் இல்லையே.. அடிச்சு விட வேண்டியதுதான் வாய்க்கு வந்ததையெல்லாம்!
வேலூர்: ஜெயலலிதா உயிரோடு இல்லாத தைரியம்தான்.. இப்படியெல்லாம் ஒரு சிலரை பேச வைத்து வருகிறது.
ஜெயலலிதா இருந்தவரை சத்தமே இல்லாமல் கிடந்தவர்கள் எல்லாம் இப்போது மைக்கை பிடித்து கொண்டு தாறுமாறாக பேச ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக சில தமிழக அமைச்சர்கள் இப்படி பேசி வருகிறார்கள்.
அதிலும் எம்ஜிஆரை கூட விட்டு வைப்பதில்லை. இப்போதிருக்கும் முதல்வரை புகழ வேண்டும் என்பதற்காக இந்த கட்சியை உருவாக்கி, வார்த்தெடுத்தவர்களையே வாரிவிடுவது போல பேசுவது அபத்தமாக இருக்கிறது. தமிழக கே.சி.வீரமணி, வேலூர் அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது 2 விஷயங்களை குறிப்பிட்டு சொன்னார்.

கோரிக்கை
முதலாவதாக, "தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்ற பழமொழிக்கேற்ப, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிசாமி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போது பொதுமக்கள் கோரிக்கைகள் வைப்பார்கள்.

கூட்டணி
ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பின்பு கோரிக்கை வைக்காமலேயே மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது" என்றார். மேலும் "பாமக, பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்து கொண்டதில்லையா? அதுபோலதான் நாங்களும்" என்று அமைச்சர் வீரமணி இன்னொரு விஷயத்தை சொன்னார்.

மறந்து பேசினாரா?
முதலில் இப்படி ஒரு பொதுக்கூட்டத்தில் நின்று பேசுவதற்கான அச்சாணியே ஜெயலலிதான் என்பதை மறந்துவிட்டு அமைச்சர் பேசினாரா? அல்லது இறந்தவருக்கு இதெல்லாம் தெரியவா போகிறது என்று பேசினாரா என தெரியவில்லை. ஜெயலலிதா ஏன் அன்று மத்தியில் ஆட்சியை கவிழ்த்தார், எதற்காக சாகும்வரை பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை, என்பதெல்லாம் தெரியாமல்தான் வீரமணி பேசினாரா என்றும் சந்தேகம் எழுகிறது.

கொந்தளிப்பு
சந்தர்ப்ப சூழல் என்ற காரணத்தை சொன்னால்கூட ஒருவகையில் ஏற்கலாம். ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்ததை அமைச்சர் நியாயப்படுத்துவதும், முதல்வரின் புகழை உயர்த்தி பிடிக்க ஜெயலலிதாவை குறைத்து மதிப்பிட்டு பேசுவதும் தொண்டர்களுக்கு கொதிப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications